top of page
ஸ்ரீ கலியுக சிதம்பரர் அந்தாதி
C. விஸ்வநாதன்

காப்பு :-

 

புல்லினில் அருகாய் பூத்தவனே! முறைதனை செய்தவர்

அல்லல் தீர்ப்பவனே! பருவரல் ஏதும் தொடராதென்

சொல்கெழு சீர்கவின் கலியுக சிதம்பரர் அந்தாதி

அல்லும் பகலும் மெல்லிசைய ஏமமருள் ஐங்கரனே!

 

நூல் :-

 

ஐந்திரண்டும் மூன்றும் திங்கள் அறுத்தமுறை பிறப்பினன்

ஐந்துநிலை பூதமாய் இயல்பிற் அளப்பிலா தோற்றமவன்

உந்திநமை ஓட்டுபவன் ஊரறிய வேதங்கள் நாலினுள்

வந்துநலங் காட்டும் கலியுகன் வார்கழல் வணங்குதுமே!         01

 

வணங்கும் வடிவெழிற் சிலையில் வந்தமர் பிராணன்

கணங்கள் படைசூழ் கலியுக கயிலைச் சோதிமுன்

சுணங்கும் சிற்குணம் அன்பில் சுத்தநீர் சுரக்கும்

அணங்கிய வான்பிறை கங்கை அமைந்த காட்சியனே!             02

 

காட்சியிற் நதிநீரேர் எளியன் யுத்தக் களத்திடை

நெஞ்சிற் போர்நெறி வலியுடை முடியன் அறநெறி

ஆட்சியிற் மாசிலா அருங்கடை மழைமுகில் குடையன்

சாட்சியான் சங்கரன் கலியுக சிதம்பரன் புகழே!                            03

 

புகழுக்குப் பூத்திடா இன்னகை புதுமணப் பூவினன்

இகழுநர் நெஞ்சினும் முணைஇ முன்னிலை ஆகுவன்

சுகந்தருஞ் சோலையன் வெறிநெடி சுடலைக் காட்டினன்

அகம்நிறை வேந்தன் கலியுக சிதம்பரன் வேறிலையே!             04

 

வேறில்லை உனையன்றி எந்நாளும் என்னில் வேற்றுவன

வேர்போட வில்லம் பின்முனை யளவும் பரப்பில்லை

காற்றாகி ஒளிரும் கலையுலக ஊற்றாகி விளங்குநன்

பரதக் கண்மிசை விஞ்ஞானக் கருவின்பம் சேர்ப்பவனே!          05

 

சேர்ந்த பூமணமும் பசுமலர் சிரிப்பினில் அழகும்

மொயத்தே இருப்பது இறைவன் வார்த்த இயற்கை

ஆர்த்த சபையிற் என்றுமென் அன்னை சிவகாமியொடு

வாய்க்க விருப்பது வார்சடையன் வென்ற வாழ்வே!                  06

 

வாழ்வு வழிநெறி அதனொடு வாழ்பவன் இசைவது

வாழச் சான்றது கலியுக சிதம்பரனே என்முழு

வாழ்வு அவன்பாடும் பொருள் லயத்தில் என்கூத்து

வழித்தடம் விதித்தவன் அவனே வானீறு அறிந்தவனே!            07

 

அறிந்த உலகினும் உலகோர் அறியாச் சுவடுண்டு

தெறித்த விதைகளால் செழுமை சீராக வருவதுண்டு

பறித்த பூவிலெனை நின்பதம் பள்ளி படிஇய

குறித்த மலராய் குடுமிய கொன்றைப் பூவாசனே!                          08

 

வாசத் திரவிய மேவரை முகிலே துளிநிலவே

வசந்தப் பூமணமே வானெழுஞ் சுடரே தையலாள்

நேசக் குரல் அன்னையாள் விடைபிரியா கலியுகனே

பாசத் திருவடி யார்நா நிற்கும் நமசிவாயவே!                                  09

 

நமசிவாய ஐந்தெழுத்து நிற்கும் நாற்றிசை நால்வேதம்

காலத்திற் கண்மூன்று உமையொடு மெய்யில் இருபாகம்

இமவான் மடந்தை வேண்டி மணந்திட்ட ஒரேதாரம்

உலகத்து நெஞ்ச மெல்லாம் நிற்கும்ஓர் பெருந்திருவே!              10

 

நூற்பயன் :-

 

பெருந்திருவுஞ் சேய்கள் இரண்டும் பிரம்மன் திருமாலும்

திருமதியும் திசைகனைய காவல் அறுபத்து ஒன்றும்

இருநிதியும் இடவலம் இருந்திங்கு வளமூட்டும் வணங்கிற்

திருவருளுஞ் செல்வம் பதினாறுஞ் சிறக்க சீர்தருமே

 

**C. விஸ்வநாதன்

 

© 2015 ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் திருக்கோயில்

  • w-facebook
  • Twitter Clean
  • w-googleplus
  • w-youtube
bottom of page