top of page

ஸ்ரீ கருப்பசாமி

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி ஆவார். வால்மீகி தர்ப்பையைக் கிள்ளிப் போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பசாமி ஆனது என்பது ராமாயணத் தகவல். வீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தையே கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பர், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு.

 

ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயிலில் கருப்பசாமி சன்னதி பிரதான வளாகத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் கம்பீர உருவம், தலைப்பாகை, இடைக்கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, மற்றும் ஓங்கிய கையில் அரிவாளுடன் அருள்புரிகிறார். கையில் சுக்குமாந்தடி காணப்படாததால் நாயக்க மன்னர்கள் காலத்திற்கு முன்பு அல்லது நாயக்க மன்னர்கள் குறுக்கீடின்றி வடிக்கப்பட்ட சிலையாக இருக்குமென கருதப்படுகிறது. மேலும் கருப்பசாமி சிலையின் நெற்றியில் சைவ அடையாளமான திருநீற்றுச் சின்னம் காணப்படுவதால் சைவ சமயத்தைப் பின்பற்றும் மக்களின் வழிபாட்டுத் தலம் என்பது உறுதியாகிறது.

 

கருப்பசாமியின் மனைவி கருப்பாயி என்றும் மகன் கண்டன் என்றும் தங்கை கருப்பழகி என்றும் அறியப்படுகிறது.

ஏழு கருப்பர்களின் தங்கையான கருப்பழகியை காத்தவராயன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சீதனமாக கருப்பழகி கோட்டை வழங்கப்பட்டது.

 

புகழேந்திப் புலவர் இயற்றிய “காத்தவராயசுவாமி கதை” நூலில் இருந்து காத்தவராயனின் மாமன்மார்களான ஏழு கருப்பர்களின் பெயர்களும் அறியப்படுகிறது.

 

1. வாங்கருப்பன்                         2.  பூங்கருப்பன்

3. மதுரை பெருங்கருப்பன்     4.  சங்கிலி கருப்பன்

5. ஆகாய கருப்பன்                    6.  சந்தன கருப்பன்

7. சமய கருப்பன்

 

கருப்பர் பூஜைக்கு சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். கருப்பருக்கு மாட்டுச் செவ்வந்தி தவிர்த்த பூக்களால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. அவருக்கான படையல் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, பழவகைகள், இளநீர், சாராயம், புகையிலைச் சுருட்டு ஆகியவை இடம் பெறுகின்றன. குல தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கும் நிகழச்சி கருப்பசாமி சன்னதியின் அருகே நடைபெறும்.

 

**C. விஸ்வநாதன்

 

 

குறிப்புச் சொற்கள்: வால்மீகி, கருப்பாயி, கருப்பழகி, காத்தவராயன், ஏழு கருப்பர்கள், சுக்குமாந்தடி, செவ்வந்தி, குல தெய்வம்.

 

ஆதார தளங்கள் :-

  1. புகழேந்திப் புலவர் இயற்றிய காத்தவராயசுவாமி கதை – BR & Sons Publications, Madras.

  2. http://www.penmai.com/forums/miscellaneous-spirituality/49911-spiritual-informations-37.html#ixzz3GlXyfq5F

© 2015 ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் திருக்கோயில்

  • w-facebook
  • Twitter Clean
  • w-googleplus
  • w-youtube
bottom of page