ஸ்ரீ காத்தவராயன்

காத்தவராயன் உரைநடைக் கதை
( C. விஸ்வநாதன் )
*************** *** **************
பரிசோதனை செய்த பார்வதி :-
சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர். அவர் மும்மூர்த்திகளையும் தேவர்களையும் அசுரர்களையும் உலகத்தையும் பல்வேறு உயிரினங்களையும் தோற்றுவிப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. அவர் சகல உயிரினங்களுக்கும் அன்றாடம் உணவு கொடுத்துப் பசியாற்றும் தொழிலையும் செய்கிறார்.
வழக்கம் போல, ஒரு நாள், சிவபெருமான் பதினான்கு லோகங்களில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் படியளந்து விட்டு கைலாயத்திற்கு திரும்பி வந்தார். அவரைக் கண்ட பார்வதி தேவி அவரின் படியளக்கும் செயலைப் பரிசோதனை செய்தறிய விரும்பினாள். சிவபெருமானுக்கு தெரியாமல் (அறியாமல் அல்ல) சிற்றெறும்பு ஒன்றைப் பிடித்து சிமிழுக்குள் போட்டு அடைத்து வைத்தாள்.
அடுத்த நாள், சிவபெருமான் உயிரினங்களுக்குப் படியளந்து விட்டு கைலாயம் வந்த பின்னர், பார்வதி தேவி அச்சிமிலைத் திறந்து பார்த்தாள். அப்பொழுது சிற்றெறும்பின் வாயில் நொய் (அரிசிக் குருணை) ஒன்று இருந்ததைக் கண்டு வியந்தாள். சிவனுக்குத் தெரியாமல் செய்தாலும் அவர் முற்றும் அறியும் பரம்பொருள் என்பதை பார்வதி தேவி அப்பொழுது முழுதாக அறிந்து கொண்டாள். இருப்பினும் ஈசனின் தொழிலை சோதனைக்கு உள்ளாக்கி தெய்வக் குற்றம் செய்ததாலும் வாயில்லா ஜீவனுக்கு வஞ்சனை செய்ததாலும் அப்பழியைத் தீர்க்க சிவபெருமானின் திருவடியைத் தொட்டு வணங்கி குறை தீர்க்க வழி கூறுமாறு வேண்டினாள்.
நந்தவனம் அமைத்தல் :-
சிற்றெறும்பை உணவின்றி அடைத்து வைத்ததால், ஏதேனும் நதிக்கரையில் அடர்த்தியான பூந்தோட்டம் கொண்ட நந்தவனம் ஒன்றை அமைத்துப் பாதுகாத்தால் அப்பழி தீரும் என்று சிவபெருமான் வழி கூறினார். அதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி, காசி நகருக்குச் செல்லும் வழியில் கங்கைக் கரையில் சித்திரப் பொய்கை ஒன்றை உருவாக்கி அதனோடு நந்தவனத்தையும் தோற்றுவித்தார். அவற்றை மனிதர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சுற்றுகளுக்கு இரும்பு வேலி இடப்பட்டது. பாதுகாவலுக்கு ஒருவரை நியமிக்க இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். கணபதி ஒரு விளையாட்டுப் பிள்ளை என்றும் கந்தன் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை என்றும் பார்வதி தேவி கூறினாள். அதனால் அவர்கள் இருவரையும் தோட்டத்துக் காவலுக்கு நியமிக்க இயலாது என்று முடிவெடுத்தனர். எனவே சிவபெருமான் தனது ஞான திருஷ்டி மூலமாக புதிய வாலிபனை உருவாக்கி பாதுகாவலுக்கு நியமித்தார். அதைத் தொடர்ந்து அவன் நந்தவனத்தை காத்துப் பராமரித்து வந்தான்.
கன்னியர் ஆடை பறிமுதல் :-
பாதுகாவலன் ஒரு நாள் நந்தவனத்தை உற்றுக் கவனித்த பொழுது மல்லிகைத் தோட்டத்தில் மலர்கள் பறிக்கப் பட்டிருந்ததைக் கண்டான். அதற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக புதரினுள் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கைலையில் இருந்து ஏழு கன்னிகள் வந்து சித்திரப் பொய்கரையில் நீராடி மல்லிகை மலர்களைப் பறித்துக் கொண்டு திரும்பிச் சென்றார்கள். இதை கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி வாலிபன், மறுநாள் அவர்களைப் பிடிப்பதென்று திட்டம் தீட்டினான். அதன்படி, மறுநாள், கன்னியர்கள் வருமுன் யாருக்கும் தெரியாத படி பொய்கைக்கு அருகிலுள்ள புதரில் ஒளிந்து கொண்டான்.
பூங்காவனம் தேடி வந்த ஏழு கன்னியர்களும் பொய்கையில் இறங்கி நீராட ஆயத்தமானார்கள். அவர்களது ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு மந்திர ஆடையில் நீராடத் தொடங்கினர். அப்பொழுது, புதருக்குள் ஒளிந்திருந்த காவலாளி, யாரும் அறியாத வண்ணம் கரையருகே வந்து ஏழு கன்னியர்களில் இளைய கன்னியின் ஆடையை எடுத்து புளியமரப் பொந்தினுள் ஒளித்து வைத்து விட்டுச் சென்றான்.
நீராடி முடித்ததும் கன்னியர்கள் கரையேறி வந்து ஆடை உடுத்தும் போது இளைய கன்னியின் ஆடை இல்லாததைக் கண்டு அஞ்சினர். அப்பொழுது பாதுகாவலன் வந்து, பூக்களைத் திருடியதால், ஆடையை ஒளித்து வைத்ததாகக் கூறிவிட்டுச் சென்றான். மானத்திற்கு பயந்த இளைய கன்னி தோளளவு கங்கையில் இறங்கி நின்று மற்ற ஆறு பேரையும் கைலைக்குச் செல்லுமாறு கூறினாள். கைலைக்குச் சென்றடைந்த கன்னியர்கள் ஆறு பேரும் சிவபெருமானிடம் நடந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறினர். இதைக் கேட்ட உடனே சிவபெருமானும் பார்வதி தேவியும் காளை வாகனத்தில் அமர்ந்து நந்தவனம் நோக்கிச் வந்தார்கள்.
காத்தவராயன் பிறப்பு ரகசியம் :-
சரக்கொன்றை மரத்தில் அமர்ந்திருந்த பாதுகாவலன் ரிஷப மூர்த்தியைக் கண்டதும் தரையிறங்கி வந்து வணங்கினான். இளைய கன்னியின் ஆடையை ஒளித்து வைத்ததற்கான காரணம் என்னவென்று சிவபெருமான் கேட்டார். பூக்களைத் திருடியதால் பூவாடையைப் பறித்து வைத்ததாக பாதுகாவலன் பதிலுரைத்தான்.
ஏழு கன்னியர்கள் தினந்தோறும் சிவ வழிபாட்டிற்காக மலர்களைப் பறித்து வந்ததாகவும் பாதுகாவலன் இதை விசாரணை செய்யாமல் இன்றைய வழிபாட்டிற்கு இடையூறு செய்து விட்டதாகவும் கூறி சிவபெருமான் கோபமுற்றார். அதனோடு பெண்ணை மானரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் கடும்கோபம் கொண்டு “மறையா பறையா வலைவா கழுவாபிடி” என்று பாதுகாவலனுக்கு சாபம் இட்டார். அப்பொழுது பார்வதி தேவி பாதுகாவலனுக்கு “வேகா சுடலையிலே சாகாதிருக்க” வரம் கொடுத்தாள். அதாவது பாதுகாவலனின் உடல் தீயினால் வேகாது என்பதாகும்.
ஈசனின் சாபத்தை இடைமறித்ததால், சிவபெருமான் பார்வதி தேவியின் மீதும் கோபம் கொண்டு, மனிதப் பிறவியெடுத்து பிள்ளைப் பாசத்தால் வேதனையில் உழன்று போகவென்றும் அதுவரை அவரது இடப்பாகத்திற்கு வரக் கூடாது என்றும் சாபம் இட்டார். ஈசனின் சாபத்தால் அஞ்சி நடுங்கிய பார்வதி தேவி, அவளுக்கு இட்ட சாபம் எப்பொழுது நீங்கும் என்று வினவினாள். பாதுகாவலன் கழுவில் இருக்கும் பொழுது அனைவரது சாபமும் நீங்கும் என்று கூறி கைலைக்குச் சென்றார்.
அதனையடுத்து பார்வதி தேவி பாதுகாவலனிடம், “மைந்தனே, உன்னால் வந்த இச்சாபம் நீங்க எத்தனை காலம் ஆகுமோ என்று தெரியவில்லை. நீ நான்கு பிறப்புகள் எடுத்து நலமுடன் என்னைப் பார்க்க வந்தால் கேட்கும் வரம் தருகிறேன்.” என வரம் தந்து விட்டு அவனைப் பிரிந்து பூமியிலே நடந்து சென்றாள்.
காத்தவராயன் முதல் பிறப்பு :-
பார்வதியிடம் இருந்து வரம் பெற்ற பின்னர் வடக்கு திசை நோக்கி நடந்து ஓட்டப் பிள்ளையார் கோவிலைச் சென்றடைந்தார். அப்பொழுது புத்தூரிலிருந்து ஒரு பிராமணப் பெண் செப்புக் குடமெடுத்து ஆற்றில் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எலுமிச்சைப் பழம் போல உருமாறி அவள் கண்ணில் படும்படி ஆற்றில் மிதந்தார். அவள் அப்பழத்தை புசித்து விட்டு தண்ணீர் குடத்துடன் படித்துறையில் ஏறி வரும் வேளையில் பத்து மாத நிறை கர்ப்பம் உண்டாயிற்று. இந்தக் கோலத்துடன் ஊருக்குள் சென்றால் என்ன நடக்குமோ என்று அஞ்சி ஆற்றில் உயிர் விடத் துணிந்து படித்துறையில் இறங்கி நடந்தாள். முழங்கால் தண்ணீரில் நின்ற பொழுது வயிற்றிலிருந்த குழந்தை மெல்ல பிரசவித்து பூமியைத் தொட்டது.
காலமில்லா காலத்தில் பிறந்த ஆண் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சிய பிராமணத்தி அதை எடுத்துச் செல்ல மனமின்றி கோரைப் புல் மெத்தையில் வைத்து விட்டுச் சென்றாள். அந்நேர வேளையில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த காராம் பறைச்சி கற்பூர சாம்பவத்தி குழந்தையின் அழுகுரல் கேட்டு நின்றாள். அழகான ஆண் குழந்தையைக் கண்டதும் அதனை வாரி அணைத்து அந்தப்புரத்திற்கு எடுத்துச் சென்றாள். குழந்தையை மாட்டுத் தோளில் படுக்க வைத்து விட்டு நெருப்பு எடுக்கச் சென்றாள். அப்பொழுது குழந்தையின் அழுகுரல் சத்தத்தால் குடிசை தீப்பற்றி எரிந்ததைக் கண்டதும் பிள்ளையார் கோவில் முன்பாக குழந்தையைக் கிடத்தி விட்டு அந்தப்புரத்திற்கு சென்று விட்டாள்.
காத்தவராயன் இரண்டாம் பிறப்பு :-
குழந்தையாக இருந்த பார்வதி மைந்தன் அவரது பூர்வக்கியானம் தெரிந்ததும் எழுந்து நடந்து காளி கோயில் அருகே வந்தார். அங்கே மேய்ந்து கொண்டிருந்த மானைக் கண்டதும் அதனருகில் இருந்த பசும்புல்லின் மேல் பனித்துளி அளவில் ஒட்டிக் கொண்டார். வலையனாகிய அவ்வூர்த் தலையாரி சிவப்புடையானின் மான் அப்பசும்புல்லை உண்டதும் வயிறு வீங்கி நடக்க முடியாமல் பாதையில் படுத்துக் கிடந்தது.
விளையாட்டுப் பெண்டிர் துரத்த முற்பட்ட பொழுதும் எழுந்து ஓடாமல் படுத்துக் கிடந்ததால் சிவப்புடையானிடம் தெரிவித்தனர். ஏதேனும் ஒவ்வாத புற்களை மேய்ந்திருக்கலாம் என்று கூறி விட்டு சிவப்புடையான் சென்றதும் பெண்டிரும் சென்றனர். சிறிது நேரம் கழித்து அந்த மானின் வயிற்றிலிருந்து அழகான ஆண் குழந்தை பிறந்து அழுகுரல் இட்டது.
அந்த வழியாக வந்த பறையர் ஒருவர் அக்குழந்தையை எடுத்து கொங்கணி மான் கம்பளியில் சுற்றி தோளில் சுமந்து சென்று கொண்டிருந்தார். வழியில் அவனைக் கண்ட சிவப்புடையான், “என்ன அது தோள் மீது?” என்று கேட்டார். அது சுரைக்காய் என்று பறையர் பதில் சொல்லிக் கொண்டிருந்த பொழுது குழந்தை தனது காலை கம்பளிக்கு வெளியில் நீட்டியது. அதிர்ச்சியடைந்த தலையாரி குழந்தையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். இது மானின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை என்று பறையர் கூறினார்.
காத்தவராயன் தலையாரியிடம் வளர்த்தல் :-
குழந்தையின் அழகையும் வடிவையும் கண்டு மகிழ்ச்சியுற்ற தலையாரி அக்குழந்தையை தனக்குத் தருமாறு பறையரிடம் கோரிக்கை செய்தார். உடனே பறையர் குழந்தையை சிவப்புடையானுக்கு கொடுத்து விட்டு சன்மானம் பெற்றுச் சென்றார். சிவப்புடையான் குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் குழந்தையை கையில் வாங்கியவுடன் அவரது மனைவிக்கு அவளை அறியாமல் பாரஸ்தனம் கட்டி பால் சுரந்தது.
மான் வயிற்றில் வந்துதித்த அக்குழந்தையை அன்று முதல் மாணிக்கத் தொட்டிலில் போட்டு தாலாட்டினார்கள். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்சத்திரம் போல் வளர்ந்து சிறு பிள்ளையானான். அப்பாலகனுக்கு “வனங்காத்த சிவப்புடையான்” என்று பெயரிட்டனர். அப்பெயரே காத்தவராயன் என்றும் அழைக்கப்படுகிறது. காத்தவராயனுக்கு ஐந்து வயது எட்டியதும் சகலமான வித்தைகளும் சாஸ்திரங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
ஆரியமாலை பிறப்பு :-
நெடுங்காலமாக புத்திரப்பேறு இல்லாதிருந்த தலையாரிக்கு மைந்தன் பிறந்த செய்தி அந்நாட்டு மன்னன் ஆரியப்பூ ராசனுக்கு தெரிய வந்தது. அதே சமயம், மன்னரின் அரசு ஆலோசகர் அப்பா பட்டருக்கும் நெடுங்காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்ததால் அவரது வீட்டில் சாளக்கிராமம் வைத்து வழிபடுமாறு ஆரியப்பூராஜன் கேட்டுக் கொண்டார். சாளக்கிராம கல்லில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன்படியே பட்டரும் அவரது மனைவியும் வீட்டில் சாளக்கிராமக் கல்லை வைத்து ஸ்ரீரங்கநாயகரையும் சிவபெருமானையும் பிரம்மனையும் மனதில் நினைத்து புத்திரப்பேறு வேண்டி அரன் பூஜை செய்தார்கள்.
குருக்களின் பூஜையால் மும்மூர்த்திகளும் மனம் மகிழ்ந்து குழந்தை வரம் கொடுக்க சித்தம் கொண்டனர். காத்தவராயனால் சிவனிடம் சாபம் பெற்ற இளையகன்னியின் உயிரை எலுமிச்சைப் பழமாக்கி குருக்களின் மனைவி அன்னதுளசிக்கு மும்மூர்த்திகளும் கொடுத்து உண்ணச் சொன்னார்கள். அப்பழத்தை உண்ட பின்னர் அன்னதுளசி கர்ப்பம் அடைந்து பத்தாவது மாதத்தில் அழகான பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள்.
கோயில் குருக்களுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி மன்னன் ஆரியப்பூராஜனுக்கு தெரியப்படுத்தப் பெற்றது. அந்த செய்தி கேட்ட மன்னன் அவரது நாட்டு மக்கள் அனைவருக்கும் சர்க்கரையும் அன்னதானமும் வழங்க ஆணையிட்டு செயல்படுத்தினார். ஆரியப்பூராஜனின் வழிகாட்டுதலால் வாய்க்கப் பெற்ற அக்குழந்தைக்கு “ஆரியமாலா” என்று பெயர் சூட்டினார்கள்.
ஆரியமாலைக்கு அரச பாதுகாப்பு :-
ஒரு நன்னாளில் மன்னரும் குருக்களும் வேதியர்களை அழைத்து ஆரியமாலையின் பிறப்பு சோதிடத்தை கணித்து கூறச் சொன்னார்கள். வேதியர்கள் ஆரியமாலையின் சோதிடத்தை ஆராய்ந்து தெரிந்ததும் அவளது பதினைந்து வயது வரை சௌபாக்கியமாக வாழ்வாள் என்றும் பதினாறாவது வயதில் தேவன் ஒருவன் அவளை சிறையெடுத்து பின்னர் சில நாட்களில் அவன் சென்றிடுவான் என்றும் உள்ளதாக எடுத்துரைத்தனர்.
இதைக் கேட்ட ஆரியப்பூராஜன், ஆரியமாலையை காப்பாற்ற வேண்டியது அவனது பொறுப்பு என ஏற்றுக் கொண்டார். அரண்மனையை ஒட்டிய பரந்த நிலப்பரப்பில் இருந்த புத்தூரில் வெள்ளெருக்கு பூத்த காட்டைத் திருத்தி முல்லைவனக் கோட்டையாக மாற்றினர். கோட்டைக்கு உள்ளே அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சகலமான வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டன. ஆரியமாலை பொழுதுபோக்கிற்குத் தேவையான சாதனங்கள், புத்தகங்கள், கேளிக்கைகள், பூங்காக்கள், மற்றும் உபசரிக்க தாதியர்கள் முதற்கொண்டு இத்யாதிப் பெண்கள் வரை அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டது.
கோட்டையைச் சுற்றி மிகுந்த அகலமும் ஆழமும் உடைய அகழியை உருவாக்கி அதில் வயிரி இனத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முதலைகளை ஆயிரக்கணக்கில் விட்டு வைத்தனர். கோட்டையைச் சுற்றி இருபத்தியொரு வனங்களை உருவாக்கி ஒவ்வொரு வனத்திலும் அதற்கான வன தேவதைகளின் சிலைகளை பிரதிஷ்டை செய்து காவலுக்கு வைத்தார்கள். அவ்வனங்களுக்கு இடையிடையே சுற்று மதில்களை உருவாக்கி ஏராளமான பாதுகாவலர்களையும் நியமித்தனர்.
கோட்டையைச் சுற்றி நாற்புறமும் தெத்துவாசல்கள் அமைத்து அவற்றிற்கு தலையாரி சிவப்புடையானை காவலுக்கு நியமித்தார் அரசர். குண்டு தப்பிப் போனாலும் குறி தப்ப விடாத திறமையுள்ளவன் சிவப்புடையான். அதனால் அவருக்கு மோகனப் பல்லக்கும் மாதம் ஆயிரம் பொன் சம்பளமும் வழங்கப்பட்டது. ஆரியமாலையை பாதுகாப்பதற்கு தேவையான செலவுகளுக்காக புத்தூர் அருகிலிருந்த நூற்றியெட்டு கிராமங்களை அவள் பெயரில் எழுதி வைத்து அதிலிருந்து வரும் மானியங்களை பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்டார். ஆரியமாலைக்கு பணிவிடைகள் செய்யும் மெல்லியர்களுக்கு நானூற்று எட்டு கிராமங்களை எழுதி வைத்தார். அவளது ஆடைகளை சலவை செய்ய வண்ணாரவல்லியான மயிலனையாள் என்ற சாந்தழகியை நியமித்து அவளுக்கு மானீசப்பேட்டையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
நாட்டுக் கணக்கெழுத நாயகப்பிள்ளையும் நகரக் கணக்கெழுத ஜெககுருநாதப் பிள்ளையும் ஊர்க் கணக்கெழுத உலந்தாச்சிப் பிள்ளையும் நியமிக்கப்பட்டனர். கோட்டை நடவடிக்கைகளை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் ஒன்பது மந்திரிகள் மற்றும் இவை அனைத்தையும் ஆட்சி செய்ய ஆரியப்பூராஜனையும் உள்ளடக்கி துளசி மகாராஜன் மற்றும் துற்போசி மகாராஜன் ஆகிய மூன்று அரசர்கள் பதவியில் அமர்த்தப்பட்டனர்.
ஆரியப்பூராஜன் ஆரியமாலைக்கு சந்திரகண்டி, சூரியகண்டி, ரத்தின சடைபில்லை, மூக்குத்தி, சிந்தாக்கு, முன்னெற்றிச் சுட்டு, காலாழிபீலி, கண்ட சரப்பதக்கம், உருட்டு வடம், கட்டு வடம், முத்துக் கெண்டிமாலை, ரத்தினங்கள், மற்றும் இன்னும் பல ஆபரணங்களையும் வழங்கினார். மேலும் ஆரியமாலை இருக்கும் அத்தேசத்தில் அரசு ஊழியர்கள் தவிர வேறு ஆண்கள் வருவதற்கு தடைஆணை பிறப்பித்தார்.
காத்தவராயனின் கம்பா பயணம் :-
அதே வேளையில் சிவப்புடையான் வீட்டில் காத்தவராயன் சகல கலைகளும் சாஸ்திரங்களும் கற்று வளர்ந்து வந்தார். காத்தவராயன் பருவ வயதை எட்டியதும் அவர் தங்களது வளர்ப்பு மகன் என்பதை சிவப்புடையான் எடுத்துரைத்தார். காத்தவராயன் அவரது பூர்வக்கியானம் அத்தனையும் அறிந்து கொண்டதும் தன்னை ஈன்றெடுத்த தாயாரை தேடிச் செல்வதாக தெரிவித்தார். அதைக் கேட்ட தலையாரி சிவப்புடையானும் அவரது மனைவியும் அழுது புலம்பினார்கள். “நீங்கள் என்னை நினைத்து அழைக்கும் பொழுது நான் வருவேன்”, என்று ஆறுதல் கூறிய காத்தவராயன், ஞாபகார்த்ததிற்காக பூண்டிருந்த ஆபரணங்களை சிவப்புடையான் கையில் கொடுத்து விட்டு மூன்று முழம் அளவிலான கந்தையை தலையில் சுற்றிக் கொண்டு கையில் சாற்றுக் கோல் பிடித்து தனது தாயைத் தேடி புறப்பட்டார்.
வீரபுரங்காவேரி, ஓமந்தூர் வழியாக பதினாயிரங் காதம் கடந்ததும் ஒரு வனப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு நந்தவனத்தின் மத்தியில் கம்பா நதி ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் நன்கு செழித்திருந்த ஆலமரத்தின் அடியில் அன்னை காமாட்சி கண்மூடித் தவம் செய்து கொண்டிருந்தாள். மரத்தில் இருந்த பறவைகளின் எச்சம் காமாட்சியின் மேனியிலும் நிறைந்திருந்தது. காத்தவராயன் நெடுந்தொலைவு நடந்து வந்ததால் மிகுந்த பசியில் இருந்தார். பசிக்குப் பாவமில்லை என்பதால் கவுண்டு (கவட்டை) கல்லெடுத்து அந்த ஆலமரத்தில் இருந்த ஒரு பறவையை அடித்தார். கல்லடிபட்ட பறவை காமாட்சியே அபயம் என்று அவள் மடியில் விழுந்தது. தவத்திலிருந்து விழித்த காமாட்சி தன் கண்களாலேயே காத்தவராயனை எரித்து சாம்பலாக்கினாள். சாம்பலான இடத்திலேயே செங்கீரைத் தண்டாக செழித்து வளர்ந்தார். பின்னர் காமாட்சி தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தாள்.
காத்தவராயன் நான்காம் பிறப்பு :-
அவள் இரண்டு கைகளை ஏந்தி தவசில் இருந்த வேளையில் காத்தவராயன் குழந்தையாக அவள் கைகளில் தவழ்ந்தார். தள்ளாத நாளையிலே இந்த தனையனை கொடுத்ததால் எப்படி வளர்ப்பேன் என்று சிவனிடம் முறையிட்டாள் காமாட்சி. ஆலமர விழுதுகளில் கலைத்தோலும் புலித்தோலும் கட்டி ஊஞ்சலாக்கி காத்தவராயனை தாலாட்டினாள். சில நாட்கள் கழித்து, கொல்லிமலை கன்னியர்கள் ஏழுபேர் அவ்விடத்தைக் கடக்கும் பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டு காமாட்சியிடம் விசாரித்தனர். காமாட்சி குழந்தை கைவரப் பெற்ற கதையையும் அதை வளர்க்க அவள் படும் இன்னல்களையும் எடுத்துரைத்தாள். உடனே அந்த ஏழுகன்னியர்கள் குழந்தையை அவர்கள் வளர்க்க அனுமதி கேட்டனர். காமாட்சியும் அதற்கு சம்மதித்து காத்தவராயனை கன்னியர்களிடம் கொடுத்தனுப்பினாள்.
காத்தவராயன் கொல்லிமலையில் வளர்தல் :-
காத்தவராயனை ஏழு கன்னியர்களும் கொல்லிமலையில் பாங்குடன் வளர்த்து வந்தார்கள். அவருக்கு ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் இந்திரஜாலம், மந்திரஜாலம், கோகரணம், கஜகரணம், கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை உள்ளிட்ட சகலவிதமான வித்தைகளும் கற்றுக் கொடுத்தனர். காத்தவராயன் அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றதும் அவரது செயல்திறனைக் கண்டு கன்னியர்கள் வியந்தனர். காத்தவராயனுக்கு விபரம் அறியும் பக்குவம் வந்ததும் தாங்கள் அவரது வளர்ப்புத் தாய் எனவும் அவரது அம்மா கம்பா நதியில் தவமிருக்கும் காமாட்சி எனவும் தெரியப்படுத்தினர்.
காமாட்சியின் மகன் காத்தவராயன் :-
தனது அம்மாவைக் காண்பதற்கு கம்பா நதிக்கரையை நோக்கிச் சென்றார். சிவ வழிபாட்டில் இருந்த காமாட்சியை “அம்மா” என்று அன்புப் பெருக்கோடு அழைத்துக் கொண்டே அவள் பாதங்களில் சரணடைந்தார். வந்திருப்பது அவளது மகன் காத்தவராயன் என்றறிந்தும் அவனை ஆசீர்வதித்து அன்போடு ஆரத்தழுவினாள். காத்தவராயன் அன்றிலிருந்து அம்மாவின் அன்றாடத் தேவைக்கான பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார்.
இளம் வயதை எட்டியதும், ஒரு நாள், காமாட்சியிடம் சென்று தான் உலக அனுபவங்களைப் பெற்று வருவதற்கு அனுமதி கொடுக்குமாறு காத்தவராயன் கோரிக்கை செய்தார். காமாட்சி அவரது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்ததோடு சில வழிகாட்டு அறிவுரைகளையும் வழங்கினார். எந்தவொரு செயலில் ஈடுபடும் முன்பு அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து விட்டு ஈடுபட வேண்டும் எனவும் காதலிலும் காமச் செயல்களிலும் நாட்டம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினாள். மேலும் அவருக்கு நினைத்தவுடன் நினைத்தபடி உருமாறும் வரம் கொடுத்து அதை பாவச் செயல்களுக்கோ அல்லது காமச் செயல்களுக்கோ பயன்படுத்தினால் சக்தியற்றுப் போகும் என்றும் தெரியப்படுத்தினாள்.
காத்தவராயனின் நண்பனாகிய சின்னான் :-
கம்பா நதி தொட்டு பல நகரங்களையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்து பல்வேறு அனுபவங்களைப் உள்வாங்கி தொட்டியம் எனும் ஊருக்கு வந்தார். அந்தக் காலத்தில் தொட்டியத்தில் மலையாள தேசத்து மக்கள் பலர் வசித்தனர். அவர்களில் சின்னான் எனும் மாந்தரீகன் ஒருவன் தனது மாந்தரீக சக்தியைக் காட்டி அவர்களை ஏய்த்து வாழ்ந்து கொண்டிருந்தான். காத்தவராயன் தொட்டியத்திற்கு வந்த பொழுது சின்னானின் ஏய்த்துப் பிழைக்கும் இழிசெயலைக் கண்டு அதை விட்டு விட்டுமாறு கூறினார்.
உடனே, சின்னான் காத்தவராயனைப் பார்த்து “நீ அனுபவத்தில் என்னை விட மூத்தவனா? அல்லது திறமையில் தான் பெரியவனா?” என்று கேட்டான்.
அதற்கு காத்தவராயன், “என்னுடைய உலக அனுபவம் வேண்டுமானால் இன்னும் முதிர்ச்சி அடையாமல் இருக்கலாம். ஆனால், என் திறமையாலும் எனது அன்னையின் அருளாலும் உன் மாந்தரீக வலிமையை வெல்ல முடியும்.” என்று சவால் விட்டார்.
அவருடன் எதிர்கொண்டு போராட சின்னானும் ஒப்புக் கொண்டான். தொட்டியத்தில் ஊரார் சூழ்ந்திருக்க இருவருக்கும் இடையே போட்டி தொடங்கியது. சின்னான் மொத்தமாக ஐந்து விதமான மாய ஏவல்களை தொடர்ச்சியாக வைத்து இறுதியாக பூரண கும்பத்தை வைத்திருந்தான். காத்தவராயன் அந்த ஐந்து மாய ஏவல்களையும் வெற்றிகரமாகக் கடந்து பூரண கும்பத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதே போட்டியாகும். அப்படி வெற்றி பெறுபவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும்.
கொல்லிமலைக் கன்னியர்கள் கற்றுக் கொடுத்த வித்தைகளையும் அன்னை காமாட்சியின் அருளாலும் அந்த ஐந்து ஏவல்களையும் வெற்றிகரமாகக் கடந்து பூரண கும்பத்தைக் கையிலெடுத்து காத்தவராயன் போட்டியில் வெற்றி பெற்றார். எனவே, போட்டி விதிமுறைகளின் படி, காத்தவராயனுக்கு சின்னான் அடிமையானான்.
பின்னர், காத்தவராயனும் சின்னானும் தொட்டியத்தில் இருந்து விடை பெற்றுக் கிளம்பினர். சின்னானை அன்னை காமாட்சியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார் காத்தவராயன். சின்னானின் மாய ஜம்பத்தை தான் அடக்கியதையும் அவனை தனக்கு அடிமையாக்கியதையும் கூறினார்.
அன்னை காமாட்சி, “இவ்வுலகில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் சமம். ஆகவே சின்னானை அடிமையாக நினைக்காமல் உனது நண்பனாக ஏற்றுக் கொள்.” என்று காத்தவராயனிடம் கூறினாள்.
மேலும் சின்னானிடம், “இனிமேல் உனது மாய வித்தைகளை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உன் சக்தியைக் கொண்டு உயிர்களை இம்சிக்கக் கூடாது.” என்று காமாட்சி கட்டளை இட்டாள். சின்னானும் அதற்கு சம்மதித்தான். இருவரும் காமாட்சியின் தாள் பணிந்து ஆசீர்வாதம் பெற்றனர். அன்றிலிருந்து சின்னானும் காத்தவராயனும் சிறந்த நண்பர்களாயினர்.
காத்தவராயன் ஆரியமாலை காதல் :-
அதே வேளையில், முல்லைவனக் கோட்டையில் ஆரியமாலை அழகாக வளர்ந்திருந்தாள். பாவாடை தாவணியில் பாங்கான வடிவுடனும் பழுத்த எலுமிச்சை நிறத்தோடும் பதினைந்து வயதைக் கடந்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள், ஆரியப்பூராஜனுக்கு தெரியாமல் ஆரியமாலையும் அவளது தோழிகளும் வனாந்தரம் சுற்றிப் பார்க்கச் சென்றனர். அடர்ந்த அவ்வனத்தில் கொடிய விலங்குகளின் நடமாட்டமும் விஷ ஜந்துக்களும் இருப்பதை உணர்ந்த தோழிகள் கோட்டைக்குச் செல்லலாம் என்று ஆரியமாலையிடம் வலியுறுத்தினர். ஆனால் ஆரியமாலை அவர்களது அறிவுரையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். இதற்கு மேல் காட்டிற்குள் பிரயாணம் செய்தால் தங்களது உயிருக்கு ஆபத்து நேருமென்று பயந்த தோழிகள் கோட்டைக்கு திரும்பிச் சென்றனர். ஆரியமாலை தனியாக காட்டிற்குள் நெடுந்தொலைவு பயணம் செய்ததால் களைப்படைந்தாள். தண்ணீரைத் தேடி கம்பா நதிக்கரை வரை சென்று விட்டாள்.
அப்பொழுது, காத்தவராயன், வேட்டையாடிய களைப்பைப் போக்க அங்கு குளித்துக் கொண்டிருந்தார். மழையைக் கண்ட பயிர் போல நதியைக் கண்ட ஆரியமாலையின் முகம் மகிழ்ச்சியில் நனைந்தது. ஓடிவந்த தண்ணீரை உள்ளங்கைகளால் அள்ளி அள்ளி உணவு போல உண்டாள். அப்பொழுது தண்ணீருக்குள் இருந்த காத்தவராயன் மேலெழுந்து பார்த்தார். காத்தவராயனும் ஆரியமாலையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். மன்மதன் அம்பு அவ்விருவரின் இதயத்தையும் ஒன்றாக தைத்தது. ஆரியமாலைக்கு தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. காத்தவராயனுக்கு நதியில் இருந்தும் சூடு தணியவில்லை. இவர்களது காதலே இறைவனின் நாடகம் என்பதை அப்பொழுது இருவரும் அறியவில்லை.
காதல் மயக்கத்தில் சிறிது நேரம் களவாடிக் கிடந்த இருவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பொழுது அந்தி நேரம் ஆகியிருந்தது. ஆரியப்பூராஜன் தினமும் மாலை வேளையில் கோட்டை நிலவரங்களை மேற்பார்வையிட வருவார். மன்னருக்கு தெரியாமல் காட்டிற்கு வந்ததால் இப்பொழுது கோட்டையில் இல்லாவிடில் பெரும் பிரச்சினை ஆகி விடும் என்று ஆரியமாலை பயந்தாள். இதைக் காத்தவராயனிடம் சொல்லி, ஏதேனும் உபாயம் இருந்தால் கூறச் சொன்னாள். காத்தவராயன் தனது உருமாறும் சக்தியைப் பயன்படுத்தி அவளை கோட்டைக்குள் சென்று விட்டு வந்தார். அன்றிலிருந்து அவர்களது காதல் உரமிட்ட செடி போல ஊட்டமுடன் வளர்ந்தது.
இவர்களது காதலை அறிந்த சின்னான் அன்னை காமாட்சியின் அறிவுரைகளை காத்தவராயனிடம் பல முறை நினைவுபடுத்தினான். ஆனால் காத்தவராயனின் புலன்கள் ஐந்தும் காதலெனும் பூட்டால் இறுகப் பூட்டியிருந்தன.
சில நாட்கள் கழித்து, அன்னை காமாட்சியிடம், தான் ஆரியமாலையைக் காதலிப்பதாக காத்தவராயன் தெரியப்படுத்தினார். அவளைக் கண்ட நாள் முதலாய் கண்களில் உறக்கம் வருவதில்லை என்று காதல் வசனங்களைக் கூறினார். மேலும், அவளை சிறையெடுத்து மணந்து கொள்ள அனுமதியும் ஆசீர்வாதமும் கொடுக்குமாறு காத்தவராயன் கோரிக்கை செய்தார்.
“தாய்க்குப் பின் தாரம் என்பது பழமொழி. உன்னைப் பெற்றெடுத்த என்னை, ஆரியமாலை எவ்வகையில் சமப்படுத்தினாளென்று அவளை மணம் முடிக்க ஆசைப்படுகிறாய்? தாயிலும் பத்தினியாள் தான் தேடிய தாரம் என்று சொல்லாதே, என் மகனே. உனக்கான பெண் ஒருத்தி மயிலணையாள் “உகந்தழகி” என்பவள் வயிரஞ்செட்டி பாளையத்தில் வயது வந்து நிற்கின்றாள். அவள் ஐந்து வயதிலிருந்தே கோட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு பஞ்சு நூற்பவள். அவளழகு கொண்ட பெண்கள் உனக்கு இந்த அவனியிலே கிட்டாது. அதனால், நீ செட்டிப்பெண் உகந்தழகியை சிறையெடுத்து வா. பின்பு ஆரியமாலையை சிறையெடுக்க வரம் கொடுக்கிறேன்.” என்று காமாட்சி எடுத்துரைத்தாள்.
காத்தவராயன், செட்டிப்பெண் உகந்தழகியை சிறையெடுக்க, அன்னை காமாட்சியிடம் இருந்து திருநீறு பெற்றுக் கொண்டு சென்றார்.
செட்டிப்பெண் உகந்தழகி சிறையெடுப்பு :-
தும்பைப் பூ போன்ற தோல் நிறத்துடன் தள்ளாத முதியவர் போல் வேடம் தரித்துக் கொண்டார். தன் வெளுத்த நெற்றியில் காமாட்சி கொடுத்த வெண்ணீறு பூசி தட்டுத் தராசு ஒன்றையும் கையில் எடுத்துக் கொண்டார். சின்னானையும் கிழவராக உருமாற்றி உடன் அழைத்துச் சென்றார். இருவரும் தள்ளாடித் தள்ளாடி நடந்து வயிரஞ்செட்டி பாளையத்திற்குள் நுழைந்தனர். அங்கே பாக்கு, வன்னி, கமுகு உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த சோலைகள் நிறைந்திருந்தன. பசித்து வருபவர்க்கு பாலமிர்தம், இளைப்பாய் வருபவர்க்கு இளநீர் என்று ஏகப்பட்ட தர்மங்கள் காணப்பட்டன. பெண்டுகளும் பிள்ளைகளும் சோழிசதுரங்கம், சொக்கட்டான், அம்மானை போன்ற ஆட்டங்களில் களைகட்டி இருந்தனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த பெண்டுகள் யாரென விசாரிக்க கூட்டமாக ஓடி வந்தனர். பெண் பிள்ளைகள் அருகில் வந்ததும், கிழவராக இருந்த காத்தவராயன், தனக்கு பெண்வாடை ஒவ்வாது என்றும் அதனால் விலகி நின்று பேசுமாறும் வெற்றுப் பகுமானம் செய்தார்.
அவரை உச்சுக் கொட்டிய பெண்பிள்ளைகள், “ஐயா பெரியவரே, ஆண்களிலே பத்தினியே! நீங்கள் யார்? இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
“நான் காஞ்சியிலிருந்து பஞ்சு வாங்கிச் செல்வதற்காக இங்கு வந்துள்ளேன். செட்டிச்சியான என் தாயார் பெயர் காமாட்சி, தகப்பனார் ஏகாம்பர செட்டி. என்னை காத்தவராய செட்டி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். இவன் என் தம்பி சின்னான் செட்டி. எங்களுக்கு மூத்தவர் விநாயக செட்டி. மாமன் பெயர் பெருமாள் செட்டி என்பதாகும். பட்டணத்துப் பெண்களே, பஞ்சிருந்தால் விலைக்குத் தாருங்கள்.” என்றார் காத்தவராய செட்டி.
உகந்தழகி சிறு வயதிலிருந்தே ஓட்டப்பிள்ளையார் கோயிலுக்கு பஞ்சு நூற்று வருவதாகவும் அவளிடம் நூற்ற பஞ்சுகள் நிறைய இருப்பதாகவும் கூறி உகந்தழகி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பத்தினியாள் நூற்ற பஞ்சை அவர் வாங்கிக் கொள்வதாகக் கூறி தட்டுத் தராசை எடுத்து ஐந்து பலம் கொண்ட படிக்கல்லை வைத்தார். உகந்தழகி, ஆபரணங்கள் பூட்டிய அழகுடன் முத்துக் குடை நிழலிலே தாதியர்கள் சூழ, அவள் நூற்ற பஞ்சு மொத்தத்தையும் கொண்டு வந்து தராசில் வைத்தாள். ஆனால் அவை ஐந்து பலம் அளவுக்கு ஈடு கொடுக்கவில்லை. இதைக் கண்ட பெண்டுகள் அனைவரும் திகைத்தனர்.
“ஆபரணம் பூட்டிய அழகி வந்து உட்கார்ந்தால் ஐந்து பலம் சரிப்படுமோ!” என்று காத்தவராய செட்டி கிண்டலடித்தார்.
சற்றும் தாமதிக்காமல் பஞ்சு வைத்த தராசுத் தட்டில் உகந்தழகியும் உட்கார்ந்தாள். இந்தச் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த காத்தவராய செட்டி, தெய்வத்தை மனதிலெண்ணி, பிறர் கண்களுக்குத் தெரியாத பெண் பூதத்தை ஏவி விட்டார். அப் பெண்பூதம் உகந்தழகியை தட்டோடு தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து சென்றது. உகந்தழகியை முதலைப்பங்கு பாறை (கோமுதலை வங்கு) எனுமிடத்தில் பத்திரமாக சிறை வைக்கும்படி காத்தவராயன் கட்டளை இட்டார்.
உகந்தழகி ஆகாயம் போறாளே என்று பெண்டுகள் அனைவரும் ஆரவாரம் இட்டுக் கொண்டே தரையில் பின்தொடர்ந்தனர். அப்பொழுது, காத்தவராய செட்டி, அவரது சாக்கிலிருந்த பணத்தை அள்ளி பெண்டுகளை நோக்கி வீசினார். அதுவரை உகந்தழகியைப் பின் தொடர்ந்த பெண்டுகள் அவளை மறந்து பணத்தைப் பொறுக்கினார்கள்.
காத்தவராயன் உகந்தழகியை முதலைப்பங்கு பாறையில் சிறை வைத்து, வேடம் கலைத்து விட்டு, அன்னை காமாட்சியிடம் சென்று தெரியப்படுத்தினார். அதைக் கேட்ட காமாட்சி மகிழ்ச்சி அடைந்தாள். பின்பு ஆரியமாலையை சிறையெடுக்க அனுமதியும் ஆசியும் கேட்டார் காத்தவராயன்.
அதைக் கேட்டு கோபமடைந்த காமாட்சி காத்தவராயனிடம், “ஆரியமாலையை விட்டு விடு. அவள் நாம் தீண்டக் கூடாத நெருப்பு. என் அண்ணன் மகள் கருப்பழகியை மணம் செய்து கொள். ஏழு கருப்பனுக்கு இளையவள் கருப்பழகி. நாகப் பழத்திலும் நல்ல கருப்பு உண்டு. ஈச்சம் பழத்திலும் இருண்ட கருப்பு உண்டு. சாமள வண்ணம் கொண்டவள் கருப்பழகி. அவளை அழகாக மணம் செய்து கொள். இவளை விடப் பெண்ணுனக்கு எங்கேயுண்டு என் மகனே!” என்றாள் காமாட்சி.
காத்தவராயன், தன் மாமன் மகள் கருப்பழகியை சிறையெடுக்க, அன்னை காமாட்சியிடம் இருந்து திருநீறு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
கருப்பழகியை சிறையெடுத்தல் :-
இராஜ வேடம் பூண்டு, காமாட்சி கொடுத்த திருநீறு பூசி, கருப்பழகியின் வனத்திற்குள் நுழைந்தார். சிங்கம் உலாவும் கருப்பழகி கோட்டையிலே ஐந்துகொத்து கல்மணிகள் மாட்டப்பட்டு இருந்தன. காத்தவராயன் அந்த கல்மணிகளை ஒலிக்க வைத்து விட்டு கோட்டைக்கு மேற்புறத்தில் பிறர் கண்டு கொள்ளுமாறு ஒளிந்து கொண்டார். மணியோசை கேட்டு ஓடி வந்த கருப்பழகி, அடித்தவரை அழைத்து வருமாறு தனது தாதியர்களை ஏவி விட்டாள். காத்தவராயனைக் கண்ட தாதியர்கள் அவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்று கருப்பழகியின் முன்னே நிறுத்தினர். அங்கே அரச மேடையில் சிம்மாசனத்தில் கருப்பழகி அமர்ந்திருந்தாள். இருவரிடையேயும் பேச்சுவார்த்தை வளர்ந்து பந்தயமாக மாறியது.
கருப்பழகி அவள் வளர்த்த ஆட்டுக்கிடாவை காத்தவராயனை நோக்கி ஏவி விட்டாள். காத்தவராயன் ஏமனென்ற ஆட்டுக்கிடாவை ஏவி விட்டார். இரு கிடாக்களுக்கும் இடையே நடந்த மோதலில் கருப்பழகியின் கிடா வெற்றி பெற்றது. அதே போல, இருவரும் ஆளுக்கொரு சேவலை மோத விட்டார்கள். அப்பொழுதும் கருப்பழகியின் சேவலே வென்றது. மூன்றாவதாக காடையை மோதவிட்டனர். அதில் காத்தவராயனின் காடை வெற்றி பெற்றதும் கருப்பழகியின் முகம் சிவந்து சீற்றத்துடன் எழுந்து வந்தாள்.
கருப்பழகியின் கோபத் தணலை தாக்குப் பிடிக்க முடியாமல், காத்தவராயன், பிச்சாண்டி கோயிலினுள் சென்று விட்டார். இருப்பினும் விடாப்பிடியாய் தேடி வந்து கொண்டிருந்தாள் கருப்பழகி. அப்பொழுது ஆறுமுகமும் ஆறிரண்டு கைகளும் கொண்டு வேலும் வடிவுமாக வேடம் மாறி இருந்தார் காத்தவராயன். சினத்துடன் ஓடி வந்த கருப்பழகி, வடிவேலவனைக் கண்டதும், தேடி வந்தவர் அத்தை மகன் என்பதை அறிந்து சீற்றம் தணிந்தாள். செந்தில் வடிவேலனின் சீரடி பணிந்தெழுந்து, அவன் தன்னை ஆட்கொண்டு விட்டதால், அவளுடைய சக்கரத்தையும் பஞ்சவிருதையும் சமர்ப்பித்து, தன்னை மாலையிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள். அவளது கோரிக்கைக்கு ஹஸ்தம் காட்டிய காத்தவராயன், கழுவடி பூஜையில் கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி கூறிவிட்டுச் சென்றார்.
ஆரியமாலையை சிறையெடுக்க ஏற்பாடு :-
பின்னர் கம்பா நதிக்கரைக்கு வந்து அன்னை காமாட்சியிடம், அவர் கருப்பழகியை வெற்றி கொண்டதையும் கல்யாண உறுதி கூறிய கதையையும் எடுத்துச் சொல்லி அதன் அடையாளமாகப் பெற்று வந்த பஞ்சவிருதைக் காட்டினார். அடுத்ததாக ஆரியமாலையை சிறையெடுக்க அனுமதி கேட்டதும் காமாட்சியின் கண்கள் வேதனையை வெளியேற்றின.
“நாலான வருணத்தில் மேலான சாதியவள். பார்ப்பனப் பெண்ணை தீண்டினால் நமக்கு பாவம் வந்து சேரும். வேதியரின் சாபம் வெந்தாலும் போகாது, மகனே. அவளைத் தொட்டு விட்டால் உன் தகப்பன் தந்த சாபம் உடனே வந்து நேருமடா. கழுவில் ஏற்றிப் பார்க்கவா உன்னை நான் பெற்றேன்.” என அழுது புலம்பினாள் காமாட்சி.
“கழுவு வந்தால் பாவமில்லை. கன்னி அந்த மாலை வந்தால் போதுமம்மா.” என்று விடாப்பிடியாக நின்றிருந்தார் காத்தவராயன். காதலெனும் கரும் போர்வை காமாட்சியின் கண்ணீரைக் கூட காண விடாமல் காத்தவராயனின் கண்களை மறைத்திருந்தது.
வேறு வழி தெரியாமல், “நீ அவளை ஹஸ்தத்தால் தொட்டால் கூட உன் சிரசு வெடித்து சீக்கிரமாய் மாண்டிடுவாய். அதனால் ஆரியமாலையை நீ தொடாமல் கொண்டு வா. இது என் வாக்கு.” என்று நிபந்தனையுடன் கூடிய அனுமதியளித்து திருநீறு கொடுத்தாள் காமாட்சி.
காமாட்சி கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டு ஆதி சிவன் போல உருமாறிச் சென்றார். ஆயிரம் பூதகணங்கள் சூழ “கோமுதலை வங்கு” இடம் நோக்கிச் சென்றார். அங்கு சென்றவுடன் ஆரியமாலையைக் கொண்டு வந்து இவ்விடத்தில் பத்திரமாக வைத்திருக்குமாறு பூதகணங்களுக்கு ஆணையிட்டார். உடனே பூதகணங்கள் ஆரியமாலையைக் கொண்டு வர புறப்பட்டனர்.
அவர்கள் சென்றதும் காத்தவராயன் அன்னை காமாட்சியை காணச் சென்றார். தவமிருந்த தாயாரின் தாள் பணிந்து விட்டு, ஆரியமாலையை கோமுதலைவங்கு தனில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை செய்து வைத்து வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவளைச் சிறையெடுக்க அனுமதித்து ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
“என்னமோ, என் மகனே! நித்தமும் உன்னுடன் போராட்டமாக இருக்கிறது. ஆரியமாலை... ஆரியமாலை... என்று அவளையே கேட்கின்றாய். என்னால் உனக்கு அனுமதி கொடுக்க இயலாது. எனக்கு மூத்தவள் வல்லத்து மாங்காளி இருக்கிறாள். அவள் தயவால் மட்டுமே ஆரியமாலையை சிறையெடுக்க முடியும். அவளிடம் சென்று வரம் கேள்.” என்று உத்தி சொல்லி விட்டு தவசடிக்குச் சென்றாள்.
அதைத் தொடர்ந்து காமாட்சியிடம் திருநீறு பெற்றுக் கொண்டு காளியைக் காணச் செல்ல காத்தவராயன் ஆயத்தமானார். தன்னுடன் வருவதற்கு சின்னானை அழைத்தால், அவன், “காளி வனம் சென்றால் திரும்பி வருவோமோ! அவள் கடும் கோபக்காரி.” என்று பயந்தான். அவனை சமாதானப்படுத்திய பின் இருவரும் பண்டாரக் கிழவனைப் போல் உருமாறினார்கள்.
காளி வனத்தில் காத்தவராயன் :-
காமாட்சி கொடுத்த திருநீறு பூசி கையில் திருவடமும் சோளியும் எடுத்துக் கொண்டு நடந்தார்கள். அடர்ந்த அவ்வனத்தில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வல்லத்துக் காளி கோயில் அருகில் வந்து நின்றனர். தன் காட்டிற்குள் ஆண் வாடை வருகிறதென்று உணர்ந்த காளி, ஒரு தக்கையை தூக்கி வாடை வந்த திசையில் எறிந்தாள். தக்கை வருவதைப் பார்த்த சின்னான் பயந்து ஒளிந்து கொண்டான். காத்தவராயன் அவர் கற்ற வித்தைகளை பயன்படுத்தி தக்கையை சோளியில் போட்டு அடைத்தார். நெடுநேரம் ஆகியும் தக்கை திரும்ப வராததால் எரிச்சலுற்ற காளி டமருகம், காதோலை, மற்றும் சூலம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஏவி விட்டாள். காளி ஏவிய அத்தனை ஆயுதங்களையும் காத்தவராயன் அடக்கி அவரது சோளியிலே போட்டு விட்டார்.
ஆயுதங்கள் எவையும் இட்ட பணி செய்து திரும்பாததால், காளி ஆங்காரக் கோபம் கொண்டு அதட்டிய பற்கடித்து எழுந்து வந்து கொண்டிருந்தாள். காளியே நேராக வருவதைக் கண்ட சின்னான் வனத்தை விட்டே ஓடினான். காத்தவராயனை கண்டதும் தன் வாய்திறந்து அவரை வாரி விழுங்கினாள் காளி. காளியின் வயிற்றுக்குள் சென்ற காத்தவராயன் அவளது ஈரற்குலை தனிலே எட்டி உதைத்தார். வயிறு அதிர்ந்த காளி, ஆரடா இவன் என்று அஞ்சனம் போட்டு ஆராய்ந்து பார்த்ததும் தன் தங்கை மகன் கழுசூலி வாங்கிய காத்தவராயன் என்றறிந்தாள்.
அவரை வயிற்றிலிருந்து வெளியே வருமாறு கூறினாள் பெரியம்மா காளி. ஆனால் தான் கேட்கும் வரத்தை தருவதாக உறுதி கூறினால் மட்டுமே வருவதாகச் சொன்னார். காளியும் அதற்கு சம்மதித்து உறுதி கூறினாள். காத்தவராயன் நிறைமாதக் குழந்தையாகி வெளியே வந்து சுயரூபம் கொண்டார். பெரியம்மா காளியின் தாள் பணிந்து ஆரியமாலையை சிறையெடுக்க வரம் கொடுக்க வேண்டும் என்றார்.
அதைக் கேட்ட காளி, “உன் தகப்பன் இட்ட சாபம் உனக்கு இப்போ பலிக்குதடா. காரிழையைத் தொட்டால் தானே கழுமரம் ஏற வேண்டும் என்பது விதி. உனக்கான கழுமரங்கள் ஏராளம் உண்டு. காட்டிற்குள் சென்று முப்பூசை கொடுத்து நன்கு வளர்ந்த ஒரு கழுமரத்தை கீழே விழவிடாமல் வெட்டி எடுத்து வா.” என்றாள்.
காத்தவராயன் காளியின் சொல்லைத் தட்டாமல் காட்டிற்குள் சென்று முப்பூசை (ஆடு, சேவல், மற்றும் பன்றி ஆகிய மூன்று உயிரினங்களை தேவதைகளுக்கு பலியாக கொடுத்தல்) செய்தார். பின்பு பலியை ஏற்றுக் கொண்ட காட்டு பூதங்களை காவலுக்கு அழைத்து கழுமரத்தை வெட்டினார். கழுமரம் கீழே விழாதபடி பூதங்கள் தாங்கிப் பிடித்து பாச்சூரில் உள்ள பாரமணல் மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்தன.
மணப்பாக்கம் ஆசாரியருக்கு புத்திர வரமளித்தல் :-
அங்கு வந்து கழுமரத்தைப் பார்வையிட்ட காளி காத்தவராயனிடம், “மணப்பாக்கத்தில் ஆசாரி மன்னவர்கள் ஏழுபேர் உள்ளனர். அவர்களுக்கு குழந்தை வரம் தந்து அழைத்து வந்தால் இக்கழுமரத்தை ஜோடித்திடுவார்கள்.” என்றாள்.
அதன் படி புத்திர வரம் வழங்க கங்காள ருத்திரர் போல சிவ வேடம் பூண்டு பதினெட்டு முத்திரைகளும் அணிந்து மணப்பாக்கம் சென்றார். அங்கிருந்த ஆற்றங்கரை திருவாத்தி மரத்தடியில் தவநிலையில் வீற்றிருந்தார். அப்பொழுது தண்ணீர் எடுக்க வந்த ஆசாரி மன்னவர்களின் மனைவிகள் (கம்மாளப் பெண்கள்) சிவனடியார் வேடத்தில் இருந்த காத்தவராயனிடம் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் அருளுமாறு கேட்டு திருநீறு வாங்கி பூசிச் சென்றனர். ஆற்றில் தண்ணீர் எடுத்து விட்டு படித்துறையில் ஏறும் பொழுது அந்த ஏழு பெண்களும் கர்பவதியாயினர். இதைக் கேள்விப்பட்ட அவர்களது கணவன்மார்கள் காத்தவராயனைத் தேடி வந்து வணங்கினார்கள்.
காத்தவராயன் அவர்களை வாழ்த்தி திருநீறு பூசியதும், “நான் உங்களுக்குப் புத்திர வரம் கொடுத்தேன். அதற்கு உபகாரமாக நீங்கள் எனக்கு கழுமரம் ஒன்று ஜோடித்து தர வேண்டும்.” என்றார்.
ஆசாரிமார்கள் கழுமரம் ஜோடித்தல் :-
உடனே அதற்கு சம்மதம் தெரிவித்த ஆசாரிமார்களுடன் காத்தவராயனும் பாச்சூர் சாலை மணல்மேடைக்கு வந்து சேர்ந்தனர். அப்பொழுது வல்லத்துக் காளியும் அங்கு வந்து கழுமரத்திற்கான வடிவமைப்புகளைக் கூறி ஜோடிக்க கட்டளை இட்டாள்.
கைவைக்கும் இடங்களிலும் கால் வைக்கும் இடங்களிலும் கடையாணி போட்டு, நாபியில் பதியும் பொழுதே நடுவுச்சி உருகும் அளவுக்கு கூர்மையாக இழைக்கப்பட்டது. கைவைக்கும் இடங்களில் எல்லாம் கடையாணி பாயும். கால் வைக்கும் இடங்களில் எல்லாம் கழுவாணி பாயும். சுற்றிலும் பதினாறு முட்கள் பதினாறு எலும்புகளை பதம் பார்க்கும் படி வைத்தனர். கழுமரத்தை ஊன்றியதும் அதன் அடிவாரத்தில் பத்து படிகளுடன் மேடை அமைத்தனர். ஆரியமாலை, உகந்தழகி, மற்றும் அன்னமுத்து ஆகிய மூவருக்கும் தனித்தனியே கூண்டுகள் செய்யப்பட்டு கழுமரத்தின் மேல் மாட்டப்பட்டன. இப்படியாக, காளி மனதின் படி கழுமரம் ஜோடிக்கப்பட்டது. இவர்கள் கழுமரம் செய்வதை யாரும் அறியாமல் இருக்க பூதங்கள் அவ்விடத்தை சூழ்ந்திருந்து காவல் செய்தன.
கழுமரம் ஜோடிக்கப்பட்ட பின்னர் பூதங்களை காவலுக்கு நியமித்து விட்டு அன்னை காமாட்சியிடம் சென்று ஆரியமாலையை சிறையெடுக்க வரம் கேட்டார். இந்த முறை, ஆயிரம் வேதியர்களும் அவர்களுடைய மனைவிகளும் ஆசாரம் குலைந்து வந்தால், வரம் கொடுப்பதாக தெரிவித்தாள் அன்னை காமாட்சி.
வேதியர்களின் ஆசாரம் குலைத்தல் :-
காத்தவராயன் தனக்கு கொல்லிமலை வளர்ப்புத் தாய்மார்கள் கற்றுக் கொடுத்த மந்திரஜால வித்தைகளைப் பயன்படுத்தி ஆரியமாலையின் பெற்றோர் உட்பட ஆறாயிரம் பார்ப்பான்களையும் அவர்கள் வீட்டில் வேலை செய்த பறையர் இனப் பெண்களையும் கலக்க வைத்தார். அதே போல அப்பார்ப்பான்கள் மனைவிகளையும் அவர்கள் வீட்டில் வேலை செய்த பறையர்களையும் கலக்க வைத்தார். பறைச்சி அருகிலிருந்து பார்ப்பான்கள் வந்தனர். பாப்பாத்தி வீட்டிலிருந்து பறையர்கள் வந்தார்கள். சிறிது நேரம் கழித்து, மாயையில் இருந்து விடுபட்டதும், பறையர் இனப் பெண் பாப்பாத்தி போலே பேசினாள். பாப்பாத்தி பறையர் பாஷை பேசினாள். உண்மையை உணர்ந்ததும் ஆறாயிரம் வேதியர்களும் இதுவென்ன சோதனை என்று கலக்கம் அடைந்தனர். இவ்விஷயம் ஆரியப்பூராஜனுக்கு தெரிந்தால் ஆக்கினை வந்துவிடும் என்று காசியை நோக்கி ஓடினார்கள். ஆறாயிரம் வேதியர்களும் அவர்களது மனைவிகளும் ஆரவாரத்துடன் சென்றார்கள்.
இந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காத்தவராயன் பழுத்த காசி குருக்களைப் போல உருமாறினார். நன்கு உலர்ந்த மாட்டுத் தோலால் செய்த ஆறாயிரம் குல்லாக்கள், பூணூல், மற்றும் பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு பூதங்களின் மூத்திரத்தை புட்டியில் அடைத்து எடுத்துக் கொண்டார். கையில் திருவரங்கப் பெட்டியும் ஓலைவாளப் பஞ்சாங்கமும் வைத்துக் கொண்டு சுத்த பூணூல் அணிந்திருந்தார். சின்னானை தனது சிஷ்யன் போலவும் முத்திரை சேவகம் பிடிக்க மூன்று பூதங்களை உருமாற்றியும் மேளதாளத்துடன் வேதியர்கள் கண்ணில் படும்படி பல்லக்கில் எதிர் வந்தார். கும்பிடப் போகையில் குறுக்கே தெய்வம் வந்தது போல காசிக்குச் செல்கையில் காசி குருக்களே இங்கு வந்து விட்டதைப் பார்த்து வேதியர்கள் காத்தவராயனை வணக்கம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தங்களுக்கு நடந்த சோதனையை எடுத்துச் சொல்லி அந்தப் பாவத்தை நீக்கி தீட்சை வழங்க வேண்டும் என்று காசி குருக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு சம்மதம் தெரிவித்து உடனே யாகம் வளர்க்க ஆரம்பித்தார். வேதியர்கள் அனைவரையும் அவர்களது குல்லா, தலைக்குடுமி, பூணூல், மற்றும் பஞ்சாங்கம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக யாகத்தீயில் போடச் சொன்னார். அவர்கள் வார்த்த அத்தனையும் வெந்து தணிந்த பின், பூதங்களின் மூத்திரத்தை புண்ணிய தீர்த்தம் என்று வேதியர்க்கு வழங்கினார். அவர்களும் அதை வாங்கி குடித்த பின், அவர் கொண்டு வந்திருந்த மாட்டுத் தோல் குல்லா, பூணூல், மற்றும் பஞ்சாங்கம் ஆகியவற்றை வினியோகித்து அணிந்து கொள்ளச் சொன்னார். அவற்றை வேதியர்கள் அணிந்த பின் ஆயிரம் பொன் தட்சணையாக வாங்கிக் கொண்டார். வேதியர்களை பூணூல் மற்றும் குல்லாவோடு ஆற்று நீரில் ஆயிரம் முறை முழுகியெழுந்து பஞ்சாங்கம் தோய்த்தால் பாவம் விலகி விடும் என தீட்சை வழங்கி விட்டுச் சென்றார்.
அதன் படியே ஆறாயிரம் வேதியர்களும் ஆயிரம் முறை முழுகி எழுந்து பஞ்சாங்கம் தோய்த்தனர். தண்ணீரில் ஊறியதால், சிறிது நேரம் கழித்து, பூணூல், குல்லா, பஞ்சாங்கம் ஆகியவை உப்பசமடைந்து நாற்றமடித்தன. அவையெல்லாம் மாமிசத் தோல் என்று அப்பொழுது தான் வேதியர்கள் அறிந்தனர். ஆறாயிரம் வேதியர்களுமே அவர்களது நியமங்களும் நிஷ்டைகளும் தவறியதால் அழுது புலம்பினார்கள். வந்தவர் காசி குருக்கள் அல்ல, ஆரியமாலையை சிறையெடுக்க வந்த தேவனாக இருக்கலாம் என்று அப்பா பட்டர் சந்தேகித்தார். இனிமேலும் இங்கிருந்தால் ஆரியப்பூராஜாவால் அனர்த்தம் வந்து விடும் என்று புத்தூருக்கே சென்று அவரவர் வீட்டில் அமர்ந்து கொண்டனர் வேதியர்கள்.
வேதியர்களின் ஆசாரம் குலைத்த பின்னர், காத்தவராயன் காமாட்சியிடம் சென்று அதனை தெரியப்படுத்தி விட்டு ஆரியமாலையை சிறையெடுக்க அனுமதி கேட்டார்.
மிகுந்த பொறுமையுடன், “ஆரியமாலை அந்தண குலத்தில் பிறந்தவள். பிராமணப் பெண்ணை தொட்டாலே பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்து விடும். அது சூழ்ந்தவனின் ஏழேழு தலைமுறையையே சுக்கு நூறாக்கி விடும். மேலும் அவள் அரச பாதுகாப்பில் இருப்பவள். இப்பொழுது நீ அவளை சிறை எடுத்தால் அரச தண்டனைக்கும் ஆளாகி கழுவில் இறப்பாய். அவளைக் காவல் காக்கும் தலையாரி சிவப்புடையான் மிகுந்த திறமைசாலி. அவனது குண்டு தப்பிப் போனாலும் குறி விட்டுப் போவதில்லை. அவனைத் தாண்டி நீ ஆரியமாலையை சிறையெடுப்பது மிகவும் கடினம். சொந்தத்தில் உனக்கு ஏராளமான பெண்கள் இருக்கும் போது இரவல் பெண் எதற்கு? கருப்பழகியை விட சிறந்த பெண் இந்த அவனியிலே கிட்டாது. ஆனால் நீயோ ஆரியமாலையை கேட்கிறாய். வேண்டுமானால் ஒன்று செய். சப்த கன்னியர்கள் தங்களது வனத்தில் பன்னிரண்டு வருடங்களாக உச்சிமலை மேலே ஒற்றைக் காலில் நின்று சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தவநெறியை குலைத்துக் கொண்டு வந்தால் நீ திறமைசாலி என்று ஒப்புக் கொள்கிறேன். அதன் பின்பு நீ கேட்ட வரம் தருகிறேன்.” என்று கூறினாள் காமாட்சி.
அதற்கு காத்தவராயன் சம்மதம் தெரிவித்து காமாட்சியிடம் இருந்து திருநீறு வாங்கிக் கொண்டு சப்தகன்னி வனம் செல்ல ஆயத்தமானார்.
சப்த கன்னியர்களின் தவம் குலைத்தல் :-
காமாட்சி கொடுத்த வெண்ணீறு பூசி, இளமைத் துடிப்புள்ள வெண் குதிரையின் மீதேறி சப்தகன்னி வனம் நோக்கி புறப்பட்டார். சப்தகன்னி வனத்தை சற்று நெருங்கிய பொழுது மலை உச்சியைப் பார்த்தார். அங்கே ஏழு கன்னியர்களும் ஊசிமுனை போல ஒற்றைக் காலூன்றி அடித்துச் செல்லும் காற்றிற்கு சற்றும் அசையாமல் சிவனே, பரனே என்று தவம் செய்து கொண்டிருந்தனர். வனத்திற்குள் சென்றதும் ஒரு மாஞ்சோலைக்குள் நின்று கொண்டு கிண்ணரியை அடித்தார்.
அதைத் தொடர்ந்து, “என்னைக் குறித்து தவமிருக்கும் கொல்லிமலைக் கன்னிகளே, உங்கள் எண்ணமெல்லாம் ஈடேற்ற இங்கு வந்துள்ளேன். நான் இருக்கும் இடத்திற்கு வேகமாய் வந்தால் நீங்கள் வேண்டும் வரம் தருவேன். சீக்கிரமாய் வந்தால் என் திருமுகத்தைக் கண்டிடலாம்.” என்று உரக்க கூறினார்.
தாங்கள் செய்த கடுந்தவத்திற்கு கயிலை மலையான் மனமிரங்கி வந்துவிட்டார்; இனி கஷ்டம் இல்லை என்று சத்தம் கேட்ட திசை நோக்கி ஓடி வந்தனர் கன்னியர்கள். அவர்கள் வருவதற்குள் நரைத்த கிழவராக தன்னை உருமாற்றிய காத்தவராயன் கிண்ணரியை தலைக்கு முட்டுக் கொடுத்து மண்டபத்தின் அருகில் படுத்திருந்தார். சிவபெருமானைக் காண மண்டபத்தின் அருகில் வந்த கன்னியர்கள், கிழவரைப் பார்த்ததும் அவரிடம் விசாரித்தனர். அப்பொழுது, காத்தவராயன், கன்னியர்களிடம் ஆமை, ஆடு, சேவற்கோழி, ஈசல், ஆணிமுத்து, மற்றும் பிள்ளைப் பூச்சி ஆகிய வடிவங்கள் எடுத்து அவர்களை அலைய வைத்து போக்கு காட்டினார். அடுத்ததாக சுண்டெலி வடிவெடுத்து வயல்வெளியில் உள்ள ஒரு பொந்துக்குள் சென்று ஒளிந்து கொண்டார்.
நன்கு களைப்படைந்த கன்னியர்கள், வந்தவர் யாரென்று இளைய கன்னியிடம் அஞ்சனம் போட்டுப் பார்த்தனர். வந்திருப்பவர் சிவனின் மைந்தன், தங்களது அத்தை மகன் என்று தெரிந்ததும் அவரை மடக்கிப் பிடிக்க அவர் ஒளிந்திருந்த வளையை குடுவையால் அடைத்து விட்டனர். இளையகன்னி அங்கு அமர்ந்து கொண்டு, மூத்தவளைச் சென்று பன்னாடையும் (பனை/தென்னை மரங்களில் நெருக்கம் குறைந்த சல்லடை போல தொங்கும் நார்) நெருப்பும் எடுத்து வரச் சொன்னாள்.
அவள் பன்னாடை எடுக்க செவ்விளநீர் தோட்டத்திற்குச் சென்றதும் தாகமாய் இருக்கிறதென்று இளநீர் பறித்து குடித்துக் கொண்டிருந்தாள். மூத்தவள் இன்னும் திரும்பவில்லையே என்று இரண்டாமவள் சென்றாள். இப்படியே ஒருத்தியைத் தேடி இன்னொருத்தி செல்ல இறுதியில் ஏழு கன்னியரும் தோட்டத்தில் மொத்தமாக இளநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அதற்குள் காத்தவராயன் வளையில் இருந்து தப்பி வெளியே சென்று சின்னானை அழைத்தார். சின்னானை தோட்டக்காரனாக உருமாற்றி இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் கன்னியர்களை இங்கு கொண்டு வரக் கட்டளை இட்டார். சின்னான் சென்றதும் சிவப்புடையான் போல உருமாறி மூன்று பூதங்களை முத்திரைச் சேவகர்களாக உருமாற்றி பஞ்சாயத்து மண்டபத்தில் காத்திருந்தார்.
சின்னானும் காத்தவராயன் கூறிய படியே, கன்னியர்களை அதட்டி மிரட்டி பஞ்சாயத்து மண்டபத்திற்கு கொண்டு வந்து சேர்த்தான். அப்போது சிவப்புடையான் உருவிலிருந்த காத்தவராயன் பிராது பற்றி கன்னியர்களிடம் விசாரித்தார்.
கன்னியர்கள் ஏழுபேரும், பசியின் கொடுமையால் இளநீரும் தேங்காய்ப்பூவும் பறித்துத் தின்றதாக கூறினார்கள். ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாத சிவப்புடையான் கன்னியர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்கச் சொன்னார். தண்டனை நிறைவேற்றப்பட்டதும் கன்னியர்களை கட்டவிழ்த்து விட்டனர். அழுது கொண்டே சென்ற கன்னியர்கள் அவர்களது நியமங்களும் நிஷ்டைகளும் குலைந்து இதுவரை செய்த தவம் வீணாகப் போனதென புலம்பிக் கொண்டதோடு மாமன் மகனை வசைபாடிக் கொண்டே நடந்தனர்.
அதே வேளையில் காத்தவராயன் மானாக உருமாறி அவர்கள் வருகின்ற பாதையில் எதிர் வந்து நின்றார். அழகிய மானைக் கண்டதும் கன்னியர்கள் அதைப் பிடிக்க துரத்திக் கொண்டு ஓடினர். ஆனால் அது அவர்களுக்கு போக்கு காட்டி விட்டு மறைந்து விட்டது. கன்னியர்கள் ஓடி வந்த களைப்பால் துவண்டு நிற்கையில் வேகமான சுழற்காற்று வந்து அவர்களது ஆடையை பறித்துச் சென்றது. நியமும் நிஷ்டையும் குலைந்த கன்னிகள் நிர்வாணமாகி வெட்கமும் குலைந்து நின்றனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வண்ணானிடம் ஆளுக்கொரு முழம் கந்தையை கடனாகப் பெற்று கட்டிக் கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் காத்தவராயனைக் கண்டனர்.
காமாட்சி கன்னியர்களை கல்லாக்குதல் :-
எல்லாம் அவனால் வந்ததென்று கன்னியர்கள் அவரை துரத்திக் கொண்டு ஓடினர். ஆனால் காத்தவராயன் அவர்களுக்கு அங்குமிங்கும் போக்கு காட்டிக் கொண்டே கம்பா நதிக்கரை வரை அழைத்து வந்தார். கன்னியர்கள் பார்ப்பதற்குள் காமாட்சியிடம் தஞ்சமடைந்து தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டினார். உடனே காமாட்சி காத்தவராயன் மீது திருநீற்றைப் பூசியதும் அன்று பிறந்த குழந்தை போலாகினார். அன்னை காமாட்சி அக்குழந்தையை ஆலவிழுதுகளில் தொட்டில் கட்டிப் போட்டு தாலாட்டிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கு வந்த கன்னியர்கள், “ஆரடி கிழவியே, இங்கு ஆள் ஒருவன் வந்தானே. அவன் எங்கே?” எனக் கேட்டனர்.
காமாட்சி அங்கு ஆள் வந்ததாக அவள் அறிந்திருக்கவில்லை என்றாள். அதற்கு கன்னியர்கள், “அவனை எங்கு ஒளித்து வைத்தாய். கூன் கிழவியே, காட்டடி.” என்று கோபமாக கேட்டனர்.
அவர்களது கோபத்தைக் கண்ட காமாட்சி, இதற்கு மேல் அவர்களை பேச விட்டால் தன்னை சபித்து விடுவார்கள் என்பதால் நெற்றிக் கண்ணை திறந்து காட்டி கன்னியர்களை கல்லாகிப் போகவென்று சபித்து விட்டாள். கன்னியர்கள் ஏழுபேரும் கல்லாகி காமாட்சியின் முன்னே நின்றார்கள். பின்னர், அம்மையப்பனின் காவலனை அழைத்து, ஒவ்வொரு கன்னியின் உயிரையும் ஒரு செப்புக் கரகமாக ஜோடித்து பொற்பிரம்பும் விபூதியும் வைத்து தவசடியில் இருக்கச் சொன்னாள் காமாட்சி. அதனைத் தொடர்ந்து குழந்தையின் மேல் விபூதியைப் போட்டு காத்தவராயனை உண்மையான தோற்றத்திற்கு கொண்டு வந்தாள்.
அப்பொழுது காமாட்சி காத்தவராயனைப் பார்த்து, “கன்னியர்கள் ஏழு பேரையும் கல்லாகிய காட்சியைக் கண்டாயா, என்மகனே? என் சாபம் இவர்களை எப்படி ஆக்கிவிட்டதென இப்பொழுது உணர்ந்தாயா?” என்றாள்.
“அம்மா, என் தாயே காமாட்சி! உன் மகிமைகளை நான் அறியாமலா இருப்பேன். என்னவோ ஏதோவென்று இத்தனை நாளாய் உன்னை எண்ணியிருந்தேன். ஆனால் இப்பொழுது உன் மகிமையை கண்ணாலே கண்டு உணர்ந்து விட்டேன். இருப்பினும் இத்தனை பாடுபட்டும் ஆரியமாலையை அடைய சந்தர்ப்பம் வரவில்லையே என்று என் அடிமனது அழுகிறது. ஈசன் இட்ட சாபம் எனக்கு என்றாவது ஒரு நாள் அரங்கேறும். நாம் தண்டனையை தள்ளிப் போட்டு வந்தாலும் தள்ளுபடி ஆகாது. இதில் உனக்கு அறியாதது ஒன்றும் இல்லை. உத்தமியே காமாட்சி, உன் வாக்கு என்றும் பொய்க்காது. ஆரியமாலையை அழைத்து வர விடை கொடுத்தால் அதுவே போதுமம்மா. வெண்ணீறு பூசிவிட்டு என் வேதனைக்கு விடையெழுது தாயே!” என்றார் காத்தவராயன்.
காத்தவராயன் கைதுப்படலம் :-
ஒரு கன்னிக்காக கழுவேறவும் துணிந்த மகனை நினைத்துக் கலங்கி நின்றாள் காமாட்சி. அன்னையிடம் இருந்து பதில் எதுவும் வாராததால் காத்தவராயன் அங்கிருந்து சென்று ஆலமர சுமைதாங்கிக் கல்லில் அமர்ந்திருந்தார். தான் ஆரியமாலையை சிறையெடுக்க அன்னையிடம் பல்வேறு விதங்களில் அனுமதி கேட்டாலும் மனமிரங்க மறுக்கிறாளே என்றும் அவளது மதத்தை எப்படி அடக்கலாம் என்றும் யோசித்துக் கொண்டிருந்தார்.
அதே வேளையில் ஆரியமாலையைக் காணாமல் பரிதவித்துக் கொண்டிருந்த வேதியர்கள், ஒரு அஞ்சனக்காரரை அழைத்து அஞ்சனம் போட்டு பார்த்தால் சிறையெடுத்தவன் யாரென தெரிந்து விடும் என ஒரு மனதாக முடிவெடுத்தனர்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேதியர்கள் மூலம் காமாட்சியை அடக்கி விடலாம் என முடிவெடுத்த காத்தவராயன், அஞ்சனக்காரர் போல உருமாறி புத்தூர் எல்லையிலுள்ள ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தார். அஞ்சனக்காரரை தேடி வந்த வேதியர் ஒருவர் இவரைக் கண்டதும் ஊருக்குள் அழைத்துச் சென்றார்.
வேதியர்கள் சூழ்ந்திருக்க அஞ்சனம் போட்டுப் பார்த்த பின், “கம்பா நதிக்கரையில் கிளை பெருத்த ஆலமரத்தடியில் கிழவி ஒருத்தி தவமிருப்பாள். அவளாலே வந்த வினைதான் உங்களுக்கு ஆரியமாலை பற்றிய துக்கம். ஆரியமாலையை சிறையெடுத்தவன் அந்த கிழவியின் இடத்தில் தான் இருக்கின்றான். அவளைக் கொண்டு வந்தால் ஆரியமாலை உங்களிடம் வந்திடுவாள்.” என்று அஞ்சனக்காரர் உருவில் இருந்த காத்தவராயன் கூறினார்.
இதைக் கேட்ட வேதியர்கள் உடனே அவ்விடம் சென்று, “ஆரடி கிழவியே நீ, எங்கள் ஆரியமாலையை சிறையெடுக்க எங்கு கற்றாய்? எங்கு ஒளித்து வைத்தாய் எங்கள் பிள்ளையை?” என்று கூறிக்கொண்டே காமாட்சியின் சடையைப் பிடித்து இழுத்தனர்.
தன் கூந்தலைத் தொட்டதும், என்ன கூச்சல் இதுவென்று காமாட்சி வெகுண்டெழுந்தாள். அவள் கோபத்தில் எழுந்த பொழுது ஈசன் கட்டியிருந்த இடைத்தோலும் அதிர்ந்தது. இதைப் பார்த்த காத்தவராயன் அசம்பாவிதம் ஏதும் நேர்ந்து விடாமல் தடுக்க ஓடோடி வந்தார்.
வேதியர்களைப் பார்த்து, “ஆரடா பிராமணர்களே, இக்கிழவியை ஏன் அடிக்கிறீர்கள். ஆரியமாலையை எடுத்துச் சென்றவன் நான் தான். உங்கள் வேதனை தீர என்னை இழுத்துச் செல்லுங்கள்.” என்றார் காத்தவராயன்.
இதைக் கேட்ட வேதியர்கள் காத்தவராயனை மல்லிகைத் தண்டு போன்ற கயிற்றால் கட்டி மாதுளைப்பூ சவுக்கால் அடித்து இழுத்துக் கொண்டு ஆரியப்பூராஜனிடம் கொண்டு சென்றனர்.
காத்தவராயனுக்கு தண்டனை அறிவிப்பு :-
அவரிடம் ஆரியமாலையை சிறை வைத்திருக்கும் இடத்தைக் கூறுமாறு ஆரியப்பூராஜன் கேட்டார். மன்னனின் கேள்விகளுக்கு மௌனமாய் இருந்ததால் காத்தவராயனே குற்றவாளி என ஆரியப்பூராஜன் அறிவித்தார். மேலும், அரச பாதுகாப்பில் இருந்த ஆரியமாலையை சிறை எடுத்ததால் காத்தவராயனை அரச தண்டனைக்கு உரியவனாக அறிவித்து அன்றை தொட்டு மூன்றாம் நாள் கழுவேற்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தலையாரி சிவப்புடையானை அழைத்து குற்றவாளியைக் கழுவேற்றும் வரை கனத்த பாதுகாப்புடன் காவலில் வைக்குமாறு அறிவுறுத்தினார்.
காத்தவராயனுக்கு கைவிலங்கு, கால்விலங்கு, மார்விலங்கு, மற்றும் மணிவிலங்கு ஆகியவற்றைப் பூட்டி உழக்கோல் பாய்ச்சினர். நன்கு அகண்ட செவ்வக வடிவமான இரும்புப் பெட்டியில் அவரைக் குப்புறக் கவிழ்ந்தபடி போட்டடைத்து பெட்டியின் வெளிப்புறத்தில் எட்டுவித கட்டுகள் கட்டி அரச முத்திரை பதித்தார்கள். பெட்டியின் அருகில் சிவப்புடையானும் ஏனைய காவலர்கள் பெட்டியைச் சுற்றிலும் அமைத்து எட்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
பெட்டிக்குள் இருந்த காத்தவராயன் தனது மூத்த அத்தையான மூதேவியை மனதிலெண்ணி உதவிக்கு அழைத்தார். மூதேவி தனது கைகளில் கவரிப்பழ முறமும் வெண்சாமர துடைப்பமும் தாங்கி கழுதையின் மேல் அமர்ந்து காத்தவராயனுக்கு உதவ வந்தாள். அவள் அரண்மனைக்குள் வந்ததும் அனைவரும் அசமந்தமாகி தூங்கி விட்டனர். அனைவரும் தூங்கிய பின் பெட்டியைத் திறந்து காத்தவராயனை வெளியேற்றினாள். காத்தவராயன் ஆரியப்பூராஜனை பெட்டிக்குள் போட்டு அடைத்து விட்டு சிவப்புடையானின் மீசையை அறுத்து விட்டுச் சென்றார். சிறிது நேரங்கழித்து மூதேவி சென்ற பின், அனைவரும் கண் விழித்தார்கள். பின்னர் மன்னரைக் காணவில்லையென தேடிய பொழுது மன்னர் பெட்டிக்குள் இருந்து தட்டினார். பெட்டியைத் திறந்து பார்த்த சிவப்புடையான் அதிர்ச்சியடைந்து இக்குற்றத்தை தாங்கள் செய்யவில்லை என தெரிவித்தார்.
அதைக் கேட்ட மன்னர், “காத்தவராயனை நான் கட்டி வைத்தேன். அவன் என்னை கட்டி வைத்தான். இது என் விதி. ஆனால் அவன் மிகுந்த திறமைசாலி. அவனைப் பிடிக்க நம்மால் முடியாது. ஒரு வேளை, அவன் ஆரியமாலையை நம்மிடம் அழைத்து வந்தால் அவனை விசாரிக்க நேரமில்லாது உடனே கழுவேற்ற வேண்டும்.” என்று சிவப்புடையானிடம் கூறினார்.
காமாட்சியின் கண்டிப்பும் கதறலும் :-
அரச காவலில் இருந்து தப்பி வந்த காத்தவராயன், அன்னை காமாட்சியிடம் சென்று ஆரியமாலையை சிறையெடுக்க வரம் கேட்டார்.
காத்தவராயன் காமாட்சியைப் பார்த்து, “அம்மா, என் தாயே! ஆரியமாலையிடம் என் ஆசையை அடகு வைத்து விட்டேன். ஆசைக்கு வெட்கமில்லை. அவளால் என் அங்கம் போனாலும் பங்கமில்லை. காசு பணமாக நானிருந்தால் கைவிட்டதும் மறந்திருப்பேன். பொன்னாகவோ பொருளாகவோ இருந்திருந்தால் போட்டு மறந்திருப்பேன். ஆசையை வைத்து விட்டதால் அவதியில் வாடுகிறேன். நீ வாக்களித்தால் தப்பாது; வரமளித்தால் பொய்க்காது. கன்னி மாலையை கவர்ந்து வர வரம் கொடுக்க வேண்டும், என் தாயே!” என்றார்.
அப்பொழுது கூட காமாட்சி, “ஏன்டா என் மகனே, என்னை ஏன் இப்படி வதைக்கிறாய். ஆரியமாலை தொடையில் நாகமச்சம் கொண்டவள். அது தாலி கட்டியவனை தப்பாமல் கொன்று விடும். மேலும் கோணலான விரல்களும் சாய்ந்த அடியிடுப்பும் கொண்டவள். அவளது முகத்தின் முன்சுழி மூத்தோரைக் கொன்று விடும். இத்தனையும் தாண்டி அவள் பிரம்ம குலத்தில் பிறந்தவள். பிராமணப் பெண்ணைத் தொட்டாலே பாவம் வந்து சேர்ந்து விடும். பொன்னையும் மண்ணையும் திருடி கழுவேறினால் கூட மதிப்புண்டு. ஆனால் பெண்ணைத் திருடி கழுவேறினால் இந்த பூலோகம் உன்னை மதியாது, என் மகனே! சொந்தத்தில் உனக்கு பெண் இருக்கும் பொழுது தூரத்து சாதியில் பெண் எதற்கு? ஆரியமாலையை மறந்து விடு. மணக்க முனைந்தால் மரணம் நிச்சயம். இப்பொழுது நான் கூறிய அத்தனையும் உன் செவியில் ஏறியதா என்று தெரியவில்லை. வரும் விதியைச் சொல்லி விட்டேன். படும் விதியைப் பட்டு விடு.” என்று அறிவுறுத்தினாள்.
இனி இங்கிருந்தால் லாபமில்லை என்று எண்ணிய காத்தவராயன் எழுந்து சென்று விட்டார்.
காத்தவராயன் வேதியர்களை சந்தித்தல் :-
கம்பா நதி தாண்டி வந்து ஒரு அடர்ந்த பூஞ்சோலையில் அமர்ந்ததும் சின்னானை அழைத்தார். சின்னானிடம் ஆரியமாலையை சிறையெடுக்க உதவி செய்யுமாறு கேட்டார்.
அதற்கு சின்னான், “ஆரியமாலை அரச காவலில் இருந்தவள். அவளிருந்த புத்தூர் கோட்டையிலே ஒற்றைப் பறவை கூட பறக்காது. பழங்கள் பழுத்தாலும் பறவைகள் வந்து மோதாது. கறந்து வைத்த பாலை காகம் கூட தீண்ட பயக்கும். அனுமதியின்றி அவளை யாராலும் அடைய முடியாது. கேடு வரும் முன்பே கெட்டமதி கூட வரும் என்பார்கள். ஆரியமாலையை மறந்து விட்டால் உனக்கான அரச தண்டனை நீங்கி விடும். அந்தக் கிழவி காமாட்சியை ஏமாற்றி விட்டு நீ எங்கு திரிந்திடுவாய்? இப்போது நான் கூறும் அறிவுரை உன் நெஞ்சுக்கு உரைத்ததா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் எனக்கு தெரிந்த மட்டும் எடுத்துச் சொல்லி விட்டேன். என்னை நம்பி என் குலத்தினில் ஏழு பெண்களும் கோத்திரத்தில் மூன்று பெண்களும் உள்ளனர். உன்னைப் போல் நானிருந்தால் எனக்கு அது ஒவ்வாது. அதனால் எனக்கு விடை கொடு.” என்று கூறி விட்டு மலையாள தேசம் சென்றான்.
சின்னானின் வார்த்தைகளும் காத்தவராயனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவன் போனால் போகட்டும் என்று விட்டு விட்டு ஆரியமாலையை சிறை எடுப்பதற்கான சிந்தனையிலேயே இருந்தார். நன்கு சிந்தித்த பின்னர், கம்பளி போர்த்தி கைத்தடி பிடித்து பறையரைப் போல உருமாறினார். ஆரியமாலையை கள்ளிக்காட்டு பூதங்கள் குடிவைத்திருந்த கோமுதலை வங்கு சென்று ஆரியமாலையை அவருடன் வருமாறு அழைத்தார்.
“அப்பா பட்டரும் அன்னத்துளசியும் ஈன்றெடுத்த அருங்கிளியே, நான் உன் தந்தைக்கு அடிமைப் பறையன். மரத்தில் ஏறி பறவைகளைப் பார்க்கும் பொழுது உன்னை நான் இங்கு கண்டேன். உன்னைக் காணாமல் உன் பெற்றோர் பால், மோர் கூட குடிக்காமல் வாடுகிறார்கள். உங்களை அப்பா பட்டர் இடத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறேன். வாருங்கள்.” என்று ஆரியமாலையை காத்தவராயன் அழைத்தார்.
அதைக் கேட்ட ஆரியமாலை பறையன் உருவில் இருந்த காத்தவராயனுடன் நடந்து சென்றாள். இவர்கள் வருவதைக் கண்ட அயலூர் சம்சாரி ஒருவர் ஆரியமாலையிடம், “யாரம்மா நீ? அருந்ததி போல இருக்கும் நீ அடிமைப் பறையனுடன் செல்கின்றாயே! நீ போகும் வகையை கொஞ்சம் பொறுமையுடன் சொல்வாயா?” என வினவினார்.
இவை எல்லாம் ஈஸ்வரனார் அவளுக்கு விதித்த தலையெழுத்து என சம்சாரிக்கு பதில் சொல்லி விட்டு பறையனுடன் தொடர்ந்து நடந்தாள். காத்தவராயன் ஆரியமாலையை காமாட்சியின் தவசடி ஓரத்தில் உட்கார வைத்து விட்டு ஒதுக்குப்புறம் சென்று வருவதாக கூறிச் சென்றார்.
அப்பொழுது காத்தவராயன் ஒரு மறைவிடத்தில் வந்து ஆறுமுகமும் பன்னிரு கையும் துலங்க வடிவெடுத்து புத்தூருக்குள் சென்றார். ஆரியப்பூராஜன் முதலாக ஆறாயிரம் வேதியர்களும் அவரைக் கைகூப்பி தொழுது அவர் கொடுத்த பஞ்சாட்சரத்தை இட்டுக் கொண்டனர். கந்தன் வடிவில் இருந்த காத்தவராயன் ஆரியப்பூமாலையை சிறையெடுத்துச் சென்றது அவரே என்றும் அவளை கோமுதலைவங்கில் குடியமர்த்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நாளை கழுவடி பூசைக்கு வந்தால் ஆரியமாலையை காணலாம் என்றும் ஆறுதல் கூறினார்.
அதற்கு வேதியர்கள், “கன்னியை சிறையெடுத்தது யாரோ, எவரோ என்று இத்தனை நாட்கள் ஆலோசனையாய் இருந்தோம். கந்தனாகிய தாங்கள் அழைத்துக் கொண்டு சென்றதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்ததாக உணர்கிறோம். இனியொன்றும் பயமில்லை.” என்றார்கள்.
அப்பொழுது ஆரியப்பூராஜன் முன்னே வந்து, “தங்களது தொழில் என்னவென்று அடியேனுக்கு அறிய ஆசை.” என்றார். அவர் நாளைய கழுவடி பூசைக்கு வந்தால் காட்சி தந்து உணர்த்துவதாகச் சொன்னார். கழுவடி பூசையில் வீட்டுக்கு ஒரு பொங்கல் வைத்து வழிபட வேண்டுமாறு ஊருக்குள் தண்டோரா போட மன்னர் உத்தரவு இட்டார்.
அதன் பின், காத்தவராயன், கருப்பழகியின் அண்ணன்களாகிய ஏழு கருப்பர்களிடமும் சென்று கழுவடி பூசைக்கு கருப்பழகியுடன் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் சம்மதம் தெரிவித்ததும் வெளியில் வேடம் கலைத்து விட்டு அன்னை காமாட்சியிடம் சென்று ஆரியமாலையை சிறையெடுக்க அனுமதி கேட்டார்.
காமாட்சி கழுவடிக்கு அனுமதி கொடுத்தல் :-
“அம்மா, என்னுடைய விதியை தப்ப வைக்க யாராலும் இயலாது. வந்த வினைகளெல்லாம் வழியில் தங்கி விடுவதில்லை. எனக்கு வந்த விதியை யானே அனுபவிப்பேன். வெண்ணீறு அள்ளியிட்டு விடை கொடம்மா, தாயாரே!” என்று உருகினார் காத்தவராயன்.
அதற்கு காமாட்சி, “ஒன்று சொல்கிறேன் கேள் மகனே, பாச்சூர் சாலையின் பாரமணல் மேடையிலே, உனக்கான கழுமரத்தை காளியவள் காவல் செய்கிறாள். ஆரியமாலை என்று சொல்லிய உனக்கு ஆச்சா வயிரமுள்ள அறுபதடி வேங்கை மரம் அலறுதடா. அது உன் நாபியை அழுத்தும் பொழுதே நாசியை உருக்கிவிடும் அளவுக்கு கூர்மையானது. கை வைக்கும் இடங்களிலும் கால் வைக்கும் இடங்களிலும் கட்டாணி தைத்து விடும். ஜாதகமும் தப்பாது. தலைவிதியும் தப்பாது. உன் தகப்பன் இட்ட சாபத்தை என்னால் தடுக்க கூட முடியவில்லை. பெண்ணுக்காக கழுவிருக்கும் உன்னை, பெற்ற அன்னையாகிய, என்னாலும் காப்பாற்ற இயலவில்லை.” என்று கூறி விட்டு திருநீறு எடுத்துக் கொடுத்தாள்.
அன்னை காமாட்சி அள்ளிக் கொடுத்த திருநீற்றை நெற்றி நிறைய பூசிய காத்தவராயன் சின்னானை உதவிக்கு அழைத்தார். அம்பாள் தவசடி ஓரத்தில் அமர்த்தி வைத்துள்ள ஆரியமாலையையும் கோமுதலை வங்கு தனில் குடியமர்த்தி வைத்திருக்கும் செட்டிப் பெண்கள் உகந்தழகி மற்றும் அன்னமுத்து ஆகியோரையும் அழைத்துக் கொண்டு கழுவடி பூசைக்கு வருமாறு சின்னானுக்கு உத்தரவிட்டார்.
கழுவடி பூசை :-
சின்னான் சென்றதும் காத்தவராயன் வல்லத்து மாங்காளியை மனத்தால் வணங்கி கழுவேற்றப் பொட்டலுக்கு வருமாறு அழைத்தார். வல்லத்து காளியவள் தக்கை, டமருகம், சூலம், சுக்குமாந்தடி, ரணசட்டி, பொலிசட்டி, மற்றும் ஏனைய ஆயுதங்களையும் தாங்கி பூதப் படைகளுடன் பாச்சூர் மணல்மேடைக்கு வந்தருளினாள். அவள் காத்தவராயனைச் சென்று கழுமரம் ஜோடித்த ஆசாரி மன்னவர்கள் ஏழுபேரையும் அழைத்து வரச் சொன்னாள்.
காத்தவராயன் காளியின் ஆணைக்கிணங்க மணப்பாக்கம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு கழுவடிக்கு வந்து சேர்ந்தார். அதே வேளையில் ஆறாயிரம் வேதியர்கள், அறுபதாயிரம் சேனைகள், ஒன்பது மந்திரிகள், தலையாரி சிவப்புடையான், இன்னுமிரு ராஜாக்கள், மற்றும் ஊர் மக்கள் ஆகியோருடன் ஆரியப்பூராஜனும் கழுவடிக்கு வந்து சேர்ந்தனர். அதன் பின் கருப்பழகியுடன் வாங்கருப்பன், பூங்கருப்பன், மதுரை பெருங்கருப்பன், சங்கிலி கருப்பன், ஆகாய கருப்பன், சந்தன கருப்பன், மற்றும் சமய கருப்பன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து, டமருகமும் பேரிகையும் முழங்க, பூரிகை எடுத்தூதி கட்டியங்கள் கூறிவர, ஆடுவார் நடனத்துடன் ஆலவட்டம் பிடித்தவர்கள் அசைந்து நடந்து வர, ஓதுவார் கானத்துடன் ஜனப்பெருக்கம் சூழ்ந்து கோமுதலை வங்கிலிருந்து மூன்று கன்னியர்களையும் கழுவடிக்கு அழைத்து வந்து சேர்ந்தான் சின்னான். புத்தூர் அப்பா பட்டரின் மகள் ஆரியமாலை, வயிரஞ்செட்டி பாளையம் வயிரஞ்செட்டியின் மகள் உகந்தழகி, மற்றும் மதுரை மேலூர் மாணிக்கச் செட்டியின் மகள் அன்னமுத்து ஆகிய மூவரையும் கூடியிருந்த அனைவரும் கைதொழுது வரவேற்றார்கள். கழுவடிக்கு வந்த கன்னியர்கள் மூவரையும் கழுமரமேறி கூண்டில் இருக்குமாறு காத்தவராயன் கூறினார். பத்து படியேறியதும் வலது பக்கக் கூண்டில் ஆரியமாலையும் இடது பக்கக் கூண்டில் அன்னமுத்துவும் பின்புறக் கூண்டில் உகந்தழகியும் புகுந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, காத்தவராயன், அவரை வளர்த்த கொல்லிமலை கன்னியர்கள் ஏழுபேரையும் அழைத்து இனிமேல் அவரைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் வழங்கி ஆசி பெற்றார். அவர்களில் இரண்டு கன்னியர்கள் கையில் மந்திரவாள் பிடித்து கழுவடியின் இடது மற்றும் வலது பக்கங்களிலும் ஏனையோர் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். மேலும் கழுமரம் ஜோடித்த ஆசாரி மன்னர்கள் ஏழுபேரையும் அழைத்து கழுமரத்தின் முன்புறக் கூண்டில் இருக்க வைத்தார். தேவையானவர்களை கழுமரக் கூண்டில் வைத்ததும் ஊர் மக்கள் அனைவரையும் பொங்கல் வைத்து படையலிட ஹஸ்தம் காட்டினார்.
அப்பொழுது அவ்வழியே காத்தவராயனின் மாமன் கருப்பனுடைய மனைவி நல்லதங்கம் தயிருள்ள பானையை தலையில் சுமந்து வந்து கொண்டிருந்தாள். வானுயர்ந்த கழுமரத்தின் உச்சியைப் பார்த்துக் கொண்டு நடந்த பொழுது கால் இடறி கீழே விழுந்ததில் தயிர்ப் பானையும் உடைந்தது. பானை உடைந்து தயிர் வீணான விரக்தியாலும் கணவனுக்கும் மாமியாருக்கும் தெரிந்தால் அடிவிழும் என்ற பயத்தாலும் அழுத நல்லதங்கம் இத்தனையும் காத்தவராயனால் நேர்ந்தது என்று அவனை சபித்தாள்.
இதைக் கண்ட காத்தவராயன் அவளை சமாதானப்படுத்த, “என் பிறவி நல்லதங்கம், நான் கழுவிருக்க போகும் பொழுதும் கனல் வார்த்தை கேட்கணுமா! பத்தினி நீ சபித்தால் பாவம் வந்து சேர்ந்திடுமே! மண்பானை தயிருக்காக என்னை மரணம் தீண்ட சபிக்காதே. பானைக்கும் ஏற்ற பணத்தை நான் கொடுக்கிறேன். உன் வாயால் என்னை சபிக்காதே. நீ கொடுத்த சாபத்தை நலமாக திரும்ப பெற்று விடு, என் தங்கையே!” என்று கோரிக்கை செய்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நல்லதங்கம், “நீ கழுவில் இருந்தாலும் காய்ந்து உலர்ந்து சாக மாட்டாய். மரக்கழுவில் இருந்தாலும் மாண்டு மடிய மாட்டாய்.” என்று காத்தவராயனுக்கு வரம் கொடுத்தாள்.
அதனையடுத்து, சின்னானை அழைத்து அவருக்கு அலங்காரம் செய்யச் சொன்னார். சின்னான் கட்டுரைக்கப் பெட்டி செய்து காத்தவராயனின் முன்கழுத்தில் தொங்க விட்டான். ஒரு காதில் ஒற்றைக் கடுக்கன் குத்தி அதன்மேல் முருகு வளையம் பூட்டினான். மற்றொரு காதில் கவுளிக் கடுக்கன் குத்தி ஆணிமுத்துத் தோடால் அழகு செய்தான். முன் விரலுக்கு மோதிரமும் ஏனைய விரல்களுக்கு கணையாழியும் போட்டான். பின்னிய சடைக்கு தாழ்வடம் இட்டு நெற்றியில் சுட்டு கட்டி கந்தப்பொடி, அத்தர் தொட்டு பன்னீரை அள்ளி தெளித்து விட்டான். தலையில் தங்க ஜரிகை வேய்ந்த பட்டுத் துண்டால் உருமால் கட்டி விட்டு நெற்றியில் குங்குமத் திலகம் வைத்தான். இடுப்பில் மாதுளம்பூ போன்ற சல்லடத்தோடு காவிக் கச்சையை சுங்கு வைத்துக் கட்டி விட்டான். அதனோடு கைகளில் கடக ஆரமும் போட்டு மலர்மாலை மாட்டி காத்தவராயனை அலங்கரித்தான்.
காத்தவராயன் கழுவேற்றம் :-
இராஜ அலங்காரத்தில் கழுவடிக்கு வந்த காத்தவராயன் கூடியிருந்த அனைவரையும் கைதொழுது வணங்கி விட்டு கழுமரத்தில் சரசரவென ஏறி உச்சியில் நின்று கழுவேறினார். அவர் கைவைத்த இடங்களிலும் கால் வைத்த இடங்களிலும் கடையாணி தைத்து கருவேல முல்லாய் உருக்கியது. அவர் நாபிக்குள் பாய்ந்த முல்லால் நாசி வியர்த்து வடிந்தது. கண்கள் பிதுங்கி உயிரெல்லாம் சோர்ந்து உதிரமாய் மெல்ல மெல்ல வடிந்து கொண்டிருந்தது. அவரது தந்தை ஈசனின் சாபம் இயல்பாய் நெருங்கியது. இருப்பினும் அன்னை பார்வதி தேவி வேகா சுடலையிலே சாகா வரம் தந்ததால் அவரது உயிர் மட்டும் வலி, வேதனையுடன் ஊசலாடியது. கூண்டுக்குள் இருந்த கன்னியர்கள் மூவரும் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அடைமழையாய் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். ஆசாரி மன்னர்கள் ஏழுபேரும் கழுவடியில் கூடி இருந்த அனைவரும் காத்தவராயனை கைகூப்பி வணங்கி நின்றார்கள்.
அப்பொழுது கைலையில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான், குண்டோதரனை வண்டாக உருமாற்றி கழுமரத்தை துளைத்து கீழே விழவைக்குமாறு ஆணையிட்டார். குண்டோதர வண்டு கழுமரத்தை துளைக்கத் தொடங்கியதைப் பார்த்த சின்னான் அபசாரம் நேர்ந்து விடாதிருக்க அதைப் பிடித்து ஒரு சிமிழுக்குள் அடைத்து வைத்தான். குண்டோதரன் அகப்பட்டதும் அவனை மீட்டு வருமாறு நந்திக்கு உத்தரவிட்டார். நந்தீஸ்வரர் குண்டோதரனை சின்னானிடம் இருந்து மீட்ட பின்பு, வரும் வழியில் அன்னை காமாட்சியிடம் காத்தவராயன் கழுவேற்றப்பட்டதை தெரியப்படுத்தினார். அதைக் கேட்ட காமாட்சி அவளது தவசடியை நந்தியிடம் ஒப்படைத்து விட்டு அவள் திரும்பி வரும் வரை பாதுகாத்து வைத்திருக்குமாறு கூறிச் சென்றாள். நந்திக்கு உபயோகமாக பொற்பிரம்பும் வீரவாளும் கொடுத்திருந்தாள்.
வெண்ணீறு அணிந்த நெற்றி முழுவதும் வியர்க்க விறுவிறுத்து, நடை குலுங்க, முடியசைய, சந்நியாசி கிழவி காமாட்சி கழுவடிக்கு வந்து சேர்ந்தாள். கழுவேறி துடித்துக் கொண்டிருந்த காத்தவராயனைப் பார்த்து அவனைப் பெற்றெடுத்த அவள் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது கதறினாள். காமாட்சி பெற்ற பிள்ளை கன்னிக்காக கழுவேறி விட்டதென கண்ணீரால் உடல் நனைத்தாள். பிள்ளைக்கு விதித்த பெண்விதியை பெற்றவளாலும் மாற்ற முடியவில்லையே என அவள் அழுத சத்தம் கூடியிருந்த அனைவரையும் வாட்டி வருத்தி விட்டது.
தனது தங்கை அழுவதை வைகுண்டத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு காமாட்சியின் கண்ணீர் நிலத்தில் விழுந்தால் பூமியையே நீறாய் எரித்து விடும் என்பதை அறிந்து தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துக் கொண்டு கயிலாயம் சென்றார்.
காத்தவராயன் கழுவிலிருந்து மீளுதல் :-
பிரம்ம தேவன் சிவபெருமானிடம், “தங்கள் மைந்தன் படும் துயரம் மகாதேவனுக்கு போதவில்லையோ! வேதனையும் வலியும் காத்தவராயனை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. எதுவும் செய்யாமல் இருந்து விட்டால் அவன் உயிர் சற்று நேரத்தில் அடங்கியே விடும். சுவாமி மனது வைத்து சுபமாக மாற்ற வேண்டும்.” என விண்ணப்பித்தார்.
அதற்கு சிவபெருமான், “அவனுடைய பெண்பித்து இப்பொழுது அவனையே பிய்த்து தின்கிறது. தாய் சொல்லுக்கும் அடங்காததால் தலைவிதியை அனுபவிக்கிறான். என்னால் அவனுக்காக இரக்கம் காட்ட இயலாது.” என்று பதிலளித்தார்.
அப்போது மகாவிஷ்ணுவும் நந்தீஸ்வரரும் முன் வந்து, “ஐயனே, காமாட்சியின் அழுகுரல் காண்போரை மட்டுமின்றி காதால் கேட்போரையும் கலங்க வைக்கிறது. அவள் கண்ணீர் மண்ணைத் தொட்டால் கண நேரத்தில் பூமி வெந்து விடும். ஐயன் மனது வைத்து அருள் செய்ய வேண்டும்.” என்றனர்.
அவர்களது கருத்தை ஆமோதித்த சிவபெருமான் நந்தீஸ்வரர், குண்டோதரன், நாரதர், நான்முகன், மகாவிஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துக் கொண்டு பாச்சூர் கழுவடிக்கு வந்து சேர்ந்தார். சிவபெருமானைக் கண்டதும் காமாட்சி மழை கண்ட பயிர் போல நம்பிக்கை கொண்டு அழுவதை நிறுத்தினாள்.
காத்தவராயனை கழுவில் இருந்து இறங்கி மீண்டு வருமாறு சிவபெருமான் ஹஸ்தம் காட்டியதும் காத்தவராயன் புண்ணியனாக மாறி கழுவிலிருந்து மீண்டார். கூண்டுக்குள் இருந்த கன்னியர்களும் ஆசாரி மன்னர்களும் அவருடன் இறங்கி வந்தனர். அப்போது அவர்களின் சோர்வு நீக்க நீர்மோரும் பானகமும் கொடுத்தார்கள். அதுவரை வேதனையால் சுருங்கி இருந்த காமாட்சியின் கண்கள் சிவபெருமானின் வெளிச்சம் பட்டதும் குளிர்ந்து மலர்ந்தது. காமாட்சி சிவனின் தாள் பணிந்ததும் அவளது தோள் தொட்டு தூக்கி நிறுத்தி தனது இடப்பாகம் வருவதற்கு உரிமையை மீண்டும் கொடுத்தார். ஆரியமாலையை கன்னியாக வாழ்ந்திறந்து, பின் கைலையில் இருக்கும் ஆறு கன்னியர்களுடன் ஏழாவது இளைய கன்னியாக சேருமென்றார்.
காத்தவராயனுடன் உகந்தழகி, அன்னமுத்து, மற்றும் கருப்பழகி ஆகிய மூவரும் சேர்ந்து உமாசமேதரரின் பாதம் பணிந்து ஆசி பெற்றார்கள். அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த அனைவரும் உமாசமேதரரை சிரம் தாழ்த்தி வணங்கி ஆசி பெற்றனர். அதற்கடுத்து, சிவபெருமான், காத்தவராயனின் திருமணச் சடங்குகளை தொடங்கி நடத்தும் படி அங்கு கூடியிருந்த அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
காத்தவராயன் திருக்கல்யாணம் :-
பச்சை ஓலையால் பந்தல் வேய்ந்து வண்ணமயமான பட்டுத் துணிகளால் அலங்கரித்தனர். மயிலிறகு கொத்தால் தரை பெருக்கி, சாந்தால் தரை மெழுகி, சந்தனத்தால் கோலமிட்டு, வந்தவர்கள் அமர பாய் விரித்து விட்டார்கள். அரசாணி நட்டு வைத்து, அம்மியையும் அருகில் வைத்து, வட்டமணை இட்டு, ஆலிலை விசிறியால் அனைவருக்கும் விசிறி விட்டனர்.
மணமக்கள் அனைவரும் புண்ணிய நீராடி புத்தாடை அணிந்தார்கள். மணப்பெண்கள் மூவரும் கனத்த கொண்டையிட்டு நெற்றி நிறைய கஸ்தூரி பொட்டிட்டு அழகு செய்தனர். உச்சி முதல் உள்ளங்கால் வரை பதினாறு வகையான பொன் ஆபரணங்கள் பூட்டி பாங்குடன் அலங்காரம் செய்தார்கள். கந்தபொடியுடன் அத்தரும் தொட்டு பன்னீர் தோய்த்து மேனியெங்கும் தெளித்துக் கொண்டார்கள். பாந்தமாய் அடியெடுத்து, பட்சமுடன் சீரெடுத்து வந்த மணப்பெண்கள் நால்வரையும் கழுமரத்து மேடையில் காத்தவராயனுடன் அமர வைத்தார்கள்.
மணமேடையில் சிவனார் பார்வதியும் மாயவர் லட்சுமியும் நான்முகன் சரஸ்வதியும் நலமுடன் வீற்றிருக்க, சந்திரரும் சூரியரும் வானவரும் தேவர்களும் வடிவாக சூழ்ந்திருந்தனர். ஆரியப்பூராஜன் முன்னிருக்க, அவருடைய மந்திரிகள், ஆறாயிரம் வேதியர்கள், அவர்களது தேவியர்கள், ஐம்பத்தாறு தேசத்துப் படை வீரர்கள், மற்றும் தலையாரி சிவப்புடையான் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் வரிசையாய் பந்தலில் அமர்ந்திருந்தனர்.
வேதியர்கள் வேதம் ஓதி, வேள்வி வளர்த்து, கல்யாணச் சடங்குகள் எல்லாம் பிறழாமல் முடித்து மங்களநாண் எடுத்துக் கொடுத்தனர். முப்பெரும் தேவர்களும் தேவிகளும் சுப ஹஸ்தம் காட்ட காத்தவராயன் மங்கள நாணை கையில் வாங்கினார். வயிரஞ்செட்டி பாளையம் வயிரஞ்செட்டியின் மகள் உகந்தழகி, மதுரை மேலூர் மாணிக்கச் செட்டியின் மகள் அன்னமுத்து நாயகி, மற்றும் மாமன் மகள் கருப்பழகி ஆகிய மூவருக்கும் வரிசையாய் மங்களநாண் பூட்டி மனைவிகளாய் ஏற்றுக் கொண்டார் காத்தவராயன். கூடியிருந்த அனைவரும் மங்கள கோஷமிட்டு வாழ்த்தி அட்சதை தூவினர். அதனைத் தொடர்ந்து மனைவியர் மூவருக்கும் நெற்றி சுற்றி குங்குமம் இட்டதும் மாயவர் வழிநடத்த வேள்வித் தீயை வலம் சுற்றினர். அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததும் அரசாணி சுற்றி வந்து அரண்மனையில் பாலும் பழமும் பருகினார்கள்.
வந்தவர்கள் அனைவருக்கும் வாழை இலையில் அப்பம், அதிரசம், உளுந்து பண்டம் உட்பட பதினெட்டு வகை தளிகையுடன் பருப்பு சாதத்தில் கூசாமல் நெய் விட்டு பழரசமும் கொடுத்து பந்தியை அலங்கரித்தனர். வாயார வாழ்த்திய அனைவரும் வயிறார சாப்பிட்டு தாம்பூல பொருட்களை வரிசையாய் வாங்கிச் சென்றார்கள். மேலும் மணமக்கள் பிராமணர்களுக்கு கோதானம் உட்பட பலவித தானங்கள் செய்து புண்ணியங்கள் பெற்றனர். அதன் பின்பு நான்காம் நாள் நாகவல்லி கழிந்ததும் காப்பு களைந்து விட்டு கணையாழி மாற்றிக் கொண்டார்கள். காத்தவராயனுக்கு வயிரஞ்செட்டி பாளையத்தையும் அன்னமுத்து கோட்டையையும் கருப்பழகி கோட்டையையும் அவரவர் பெண் வீட்டார் சீதனமாய்க் கொடுத்தனர்.
மாயவர் லட்சுமியும் பிரம்மன் சரஸ்வதியும் மணமக்களுக்கு அறிவுரை சொல்லி வாழ்த்து தெரிவித்து அவரவர் லோகத்திற்கு சென்றனர். உமாசமேதரர் காத்தவராயனை மனைவியருடன் திருச்சிராப்பள்ளியில் சென்று வாழும்படி அறிவுறுத்தினார். அதற்கான ஏற்பாடுகளையும் வேண்டிய வசதிகளையும் செய்து தரும்படி ஆரியப்பூராஜனுக்கு ஆணையிட்டார். அதன் பின் வெள்ளை ரிஷபத்தின் மேல் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்து அவர்களை வாழ்த்தி ஹஸ்தம் காட்டி கயிலாயம் புறப்பட்டனர்.
சிவபெருமானின் ஆணைக்கிணங்க, ஆரியப்பூராஜன், மணமக்களை பாச்சூரிலிருந்து திருச்சிராப்பள்ளி நகருக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று குடியமர்த்தினார். ஆரியமாலை அப்பா பட்டரின் மகளாக மட்டுமே வாழ்ந்து கைலாயம் அடைந்தாள். காத்தவராயன் திருச்சிராப்பள்ளியில் உகந்தழகி, அன்னமுத்து, மற்றும் கருப்பழகி ஆகியோருடன் அன்பாக கலந்திருந்தார். அவர்கள் பிள்ளைகள் பெற்று, பேருலகப் பேறுகள் பதினாறும் குறைவின்றி கிடைக்கப் பெற்று நிறைவாக வாழ்ந்திருந்தார்கள்.
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
**C. விஸ்வநாதன்
குறிப்புச் சொற்கள்: படியளத்தல், சிற்றெறும்பு, நந்தவனம், பாதுகாவலன், இளைய கன்னி, பறையா கழுவாபிடி, சாகா வரம், தலையாரி சிவப்புடையான், வனங்காத்த சிவப்புடையான், ஆரியப்பூராஜன், அப்பா பட்டர், அன்னதுளசி, சாலக்கிராமம், ஆரியமாலை, புத்தூர், அரச பாதுகாப்பு, கொல்லிமலை கன்னியர்கள், தொட்டியம், சின்னான், காமாட்சி அறிவுரை, கம்பா நதிக்கரை, காதல், வயிரஞ்செட்டி பாளையம், பஞ்சு நூற்பு, உகந்தழகி சிறையெடுப்பு, கோமுதலை வங்கு, கருப்பழகி சிறையெடுப்பு, பஞ்ச விருது, பிரம்மகுலம், பிரம்மஹத்தி தோஷம், காளி வனம், முப்பூசை, கழுமரம், மணப்பாக்கம் ஆசாரிமார்கள், வேதியர்கள் ஆசாரம், காசி குருக்கள், சப்த கன்னியர்கள், ஊசிமுனை தவம், அஞ்சனக்காரர், காத்தவராயன் கைது, மூதேவி, அடிமைப் பறையர், கழுவடி பூசை, நல்ல தங்கம், இராஜ அலங்காரம், கழுவேற்றம், குண்டோதரன், தவசடி, காமாட்சி கண்ணீர், கழுவிலிருந்து மீளுதல், நீர்மோர், பானகம், உகந்தழகி, அன்னமுத்து, கருப்பழகி, கல்யாணம், முப்பெருந் தெய்வங்கள், உமாசமேதரர், சுபஹஸ்தம், திருச்சிராப்பள்ளி.
ஆதார தளங்கள் :-
-
புகழேந்திப் புலவர் இயற்றிய காத்தவராயசுவாமி கதை – BR & Sons Publications, Madras.
-
காத்தவராயன் கதைப் பாடல், நா. வானமாமலை, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை.
-
தமிழ் மரபு அறக்கட்டளை இணைய நூல்: http://www.tamilheritage.org/old/text/ebook/katruv/index.html
-
காத்தவராயன் தமிழ்த் திரைப்படம்: https://www.youtube.com/watch?v=b0ZTDMAPBQI
-
https://groups.google.com/forum/#!msg/mintamil/LAMv-rVmRV0/F4EbKmaFbO0J