ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் வரலாறு

ஸ்ரீ கலியுக சிதம்பரர் கோயிலானது ‘கலியுகநாதன் கோயில்’ என்றும் ‘கழுவநாதன் கோயில்’ என்றும் பரவலாக அழைக்கப்படுகின்றது. சைவ இலக்கியப் பாடல்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் காணப்படாவிடினும் இப்பகுதி மக்களால் “தென்கயிலை” என்றும் “தென்னகக் காசி” என்றும் கருதப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகருக்கு அருகிலுள்ள முத்துலாபுரம் எனும் ஊரில் வஞ்சிஓடைக் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கட்டட அமைப்பு மற்றும் தொல்லியல் தடயங்களில் இருந்து, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தலம் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
மூலவர் ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் மற்றும் திருத்தல நாயகி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆகியோராவர். தமிழகத்தில் குபேர தலத்தில் முப்பெருந் தெய்வங்களுடன் வளர்நிதிகளான சங்கநிதி மற்றும் பத்மநிதி அருள்புரியும் சிறப்பு வாய்ந்த ஒரே தலம் இஃதாகும். முதன்மைத் தெய்வமான சிவபெருமானுடன் சிவகாமி, விஷ்ணு, பிரம்மா, கணபதி, தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்கா, பைரவர், நவகிரக நாயகர்கள், பலிபீடம், கொடிமரம், அதிகார நந்தி ஆகிய தெய்வங்கள் ஒரே இடத்தில் சிவாகம விதிகளின் படி “ஓம்” எனும் பிரணவ அட்சர வடிவமைப்பில் வரிசையாக அமைந்துள்ள சக்தி வாய்ந்த திருக்கோயிலாகும்.
நதிக்கரையில் முப்பெருந் தெய்வங்களும் ஒன்றாக அருள்புரிவதால் பாவங்களை நீக்கி வரமருளும் புண்ணியத் தலமாகும். காசியில் காணப்படுவது போலவே வடக்கிலிருந்து தெற்காக பாயும் வஞ்சிஓடைக் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் சிவபெருமான் யுகத்தின் பெயரைத் தாங்கி சிதம்பர நாயகராக கலியுகத்தில் உயிர்களுக்கு மோட்சம் வழங்குகிறார். குபேர தலமான இத்திருக்கோயிலின் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ உமா சமேதரரும் தல விருட்சமாக வில்வம் மற்றும் வன்னி மரங்களும் தீர்த்தங்களாக வஞ்சித் தீர்த்தம் மற்றும் பிரம்ம கூபம் ஆகியவை காணப்படுகிறது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகவும் விளங்குகிறது.
ஸ்தல வரலாறு
கோயில் என்பது கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கிறது. அது இறைவன் வாழுமிடம் என்பதால் ‘கோயில்’ என்றும் ஆன்மா லயப்படுகின்ற இடம் என்பதால் ‘ஆலயம்’ எனவும் அழைக்கப்படுகின்றது. ஒரு கோயில் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்குலத்திலும் பிரம்மாண்டமான உழைப்பும் சொல்லப்படாத ரகசியங்களும் புதைந்திருக்கின்றன. கலியுகத்தில் பலவிதமான துன்பங்கள் மனிதனைத் துரத்துவதால், அவற்றை விலக்கிக் கொள்வதற்கு ஒரு ஆதாரமான இடம் தேவைப்படுகிறது. அந்த இடமே இறைவன் லயமாகி இருக்கும் ஆலயமாகும். கோயில்கள் மனித இனத்தின் வரலாற்றையும் அழகியல் மரபுகளையும் மற்றும் அவர்களது உணர்வுக் குவியல்களையும் தாங்கிக் கொண்டு வியாபித்திருக்கின்றன.
இந்து சமயக் கோயில்கள் தேவகம், அசுரம், முனிதரம், மற்றும் மானுஷம் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் தேவக வகையில் இருப்பதாக ஸ்தல புராண செவிவழிச் செய்திகளும் மானுஷ வகையைச் சார்ந்ததென தொல்லியல் & கல்வெட்டுத் தடயங்களும் உணர்த்துகின்றன.
அழகாபுரியிலிருந்து குபேரன் :-
குபேரன் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவர். சிவனின் இனிய நண்பராதலால் சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. பிரம்மாவின் பேரனான குபேரனுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மற்றும் சூர்ப்பனகை ஆகியோர் சகோதர சகோதரியாவர். சிவபக்தியின் காரணமாக குபேரனுக்கு செல்வத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை சிவபெருமான் தந்தார். நவநிதிகளான ஒன்பது வகையான நிதிகளுக்கும் குபேரன் அதிபதியாக விளங்குகிறார். இவற்றுள் சங்கநிதி (பொருட்செல்வம்) மற்றும் பத்மநிதி (கல்விச் செல்வம்) ஆகிய இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் இருவரும் குபேரனின் மனைவிமார்கள் என்றும் குபேரன் இவர்களிடம் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டினத்தினை படைத்துத் தந்தார். தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக கருத்துண்டு. குபேரபட்டினமான அழகாபுரியின் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் இருப்பவர் குபேரன். அவர் சிவந்த மேனியும் குள்ளமான உருவமும் பெரிய வயிறும் உடையவராக சித்தரிக்கப்படுகிறார். அழகாபுரியின் நிதி நிர்வாகத்தையும் ஆட்சி நிர்வாகத்தையும் குபேரன் திறம்படச் செய்து வந்தார்.
சில காலங்களுக்குப் பிறகு அழகாபுரியை குபேரனின் சகோதரனான ராவணன் கைப்பற்றி ஆட்சி செய்தான். இதனால் அங்கிருக்க விரும்பாத குபேரன் சிவனை தரிசிக்க வேண்டி கயிலாய மலையை நோக்கிப் பயணம் செய்தார். பயணத்தின் பொழுது வஞ்சிஓடை நதிக்கரையில் இளைப்பாறுவதற்காகத் தங்கினார். அந்த இயற்கையின் அமைதியில் மனம் லயித்த குபேரனுக்கு சிவ வழிபாடு செய்ய எண்ணம் தோன்றியது. வஞ்சி ஆற்றங்கரை மணலைக் கொண்டு சிவலிங்கம் பிடித்து வழிபாட்டைத் தொடங்கிய குபேரன் அப்படியே ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்.
குபேரனின் வஞ்சிக்கரை தவப்பயன் :-
இயற்கையின் அமைதியான சூழலில் அவரது மனம் ஒருநிலை அடைந்ததால் அவரது தவம் எவ்விதத் தேக்கமும் இன்றி விரைவாக பூரணத்துவத்தை எட்டியது. அதன் பயனாக சிவபெருமான் குபேரனின் இருப்பிடத்திற்கே வந்து ரிஷபாரூடராக காட்சி அளித்தார். அவருடன் பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும் நேரில் வந்து காட்சி கொடுத்தனர். சிவபெருமானின் கயிலாய தரிசனத்தை விரைவிலேயே கண்டதால் குபேரனின் மனம் மகிழ்ந்தது.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் அனைத்தும் இயல்பாக நடந்ததால் வஞ்சி நதிக்கரையின் புனிதத்தை குபேரனால் உணர முடிந்தது. அவர் பெற்ற இன்பத்தை கலியுகத்தில் வரும் மக்களும் பெற வேண்டும் என்று குபேரன் சிவபெருமானிடம் வரம் பெற்றார். அதன்படி கலியுகத்தில் சிவபெருமான் சிதம்பர நாயகராக இங்கு அருள்புரிகிறார். மேலும் சிவபெருமான் வரமளித்ததற்கு நன்றி செய்யும் விதமாகவும் தனது எண்ணம் விரைவாக ஈடேற நின்ற இயற்கைக்கு நன்றி செய்யும் விதமாகவும், நவநிதியங்களில் வளர்நிதிகளான சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகிய இருவரை இத்தலத்தில் தங்கியிருந்து கலியுகத்தில் இங்கு வந்து சிவனை வழிபடும் மக்களுக்கு கல்வி மற்றும் தன வளர்ச்சியை வழங்குமாறு குபேரன் பணித்தார்.
இதனால் மூலஸ்தான நிலைக்கு இடது மற்றும் வலது பக்கங்களில் சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகியோர் அருள்புரிகின்றனர். சங்கநிதி கைகளில் செல்வச் செழிப்பினை குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கு காணப்படுகிறது. பத்மநிதி கைகளில் கல்விச் செல்வத்தினை குறிக்கும் அடையாளமான தாமரை காணப்படுகிறது. இங்கு சிவபெருமான் சிதம்பரராக வழிபடப்பட்டாலும் தேவகக் கோயில் என்பதால் லிங்கத் திருமேனியராக காட்சி கொடுக்கிறார். குபேரன் வழிபட்ட சிவலிங்கம் கலியுகத்திலும் அங்கேயே இருந்ததாக நம்பப்படுகிறது.
கனவில் தோன்றிய சிவபெருமான் :-
கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை பாண்டியர் காலத்தில் தொட்டையசாமி நாயக்கர் எனும் ஜமீன்தார் நிர்வகித்தார். அவர் பாண்டிய அரசவையில் ஆஸ்தான குருவாக பொறுப்பு வகித்தார். அதனால் இப்பகுதி அவரது பெயராலேயே “தொட்டையங்கோட்டை துவராபுரி” (Dhoddaiyan kottai Thuvaraapuri) என அழைக்கப்பட்டது.
ஒரு நாள் நாயக்கரின் கனவில் சிவபெருமான் துறவி வடிவில் தோன்றி மும்மூர்த்திகளையும் ஒரே ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்து கோயிலெழுப்ப அருள்பாலித்தார். கனவு கலைந்து எழுந்ததும் மெய் சிலிர்த்த நாயக்கருக்கு கோயிலெழுப்ப உகந்த இடத்தை தேடும் ஆர்வம் உதயமானது. அடுத்த நாள் அதிகாலையில் இருந்தே பக்திப் பரவசத்துடன் கோயில் கட்ட உகந்த ஸ்தலத்தை மனதாலே தேடி அலைந்தார். அதைப் பற்றி பாண்டிய மன்னரிடம் அரசவையில் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அரண்மனை வேலையாட்கள் பற்றிய வழக்கு ஒன்றை மன்னரின் விசாரணைக்காக அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
மிளகை ஆமணக்கு முத்தாக்கிய லீலை :-
அரண்மனை வேலையாட்கள் அரசுக்குச் சொந்தமான மலைப் பகுதியில் விளைந்த மிளகுகளை மூட்டை கட்டி கழுதை மீதேற்றி கொண்டு வந்து கொண்டிருந்தனர். வஞ்சி ஓடையைக் கடக்கையில் கரையில் இருந்த துறவி ஒருவர் அவர்களிடம் சிறிது மிளகு கேட்டார். ஆனால் அவர்களோ அதை மிளகு மூட்டையல்ல; ஆமணக்கு முத்துகள் எனக் கூறிச் சென்றனர். அரண்மனைக்கு வந்ததும் கணக்காளர்களிடம் மூட்டைகளை அவிழ்த்துக் காட்டிய பொழுது அனைத்தும் ஆமணக்கு முத்தாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கணக்காளரிடம் வஞ்சியோடைக் கரையில் நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்தனர். ஆனால் கணக்காளர்களோ வேலையாட்கள் தான் மிளகு மூட்டைகளைக் கடத்தி விட்டு நாடகம் ஆடுகிறார்கள் என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். வேலையாட்களும் கணக்காளர்களும் அவரவர் தரப்புகளில் தீர்மானமாக இருந்ததால் அதிகாரிகள் மன்னரிடம் மேல் முறையீடு செய்தனர்.
இவர்களது வழக்கை மன்னர் விசாரித்துக் கொண்டிருந்த பொழுது அருகிலிருந்த நாயக்கரும் அதை கவனித்துக் கொண்டிருந்தார். நாயக்கர் கனவில் துறவி உருவில் காட்சியளித்த சிவபெருமான் தான் வஞ்சி ஓடைக் கரையிலும் துறவியாக வந்துள்ளார் என்பதை மன்னரும் நாயக்கரும் உணர்ந்து கொண்டார்கள். சிவபெருமானே துறவியாக வந்து இந்த அதிசயத்தை நிகழ்த்தி கோயில் கட்ட உகந்த ஸ்தலத்தையும் குறிப்பால் அடையாளப் படுத்தியுள்ளார் என்பதை அறிந்தனர்.
பாண்டியர் பங்களிப்பில் திருக்கோயில் :-
பாண்டிய மன்னரும் நாயக்கரும் அரச பரிவாரங்களோடு வஞ்சிஓடைக் கரையில் துறவி இருந்த இடத்திற்கு வந்தடைந்தனர். வேலையாட்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் குபேர லிங்கமும் வளர்நிதிகளின் சின்னமும் இருந்ததைக் கண்டு அனைவரும் பக்திப் பரவசத்தில் கைகூப்பி வணங்கினார்கள். கோயில் கட்டுவதற்கு அதுவே உகந்த இடம் என்று அனைவரும் தீர்மானித்தனர்.
பாண்டிய மன்னரின் முழு பங்களிப்புடன் சிவபெருமானின் அருள்வாக்குப் படி முப்பெருந் தெய்வங்களுடன் தக்ஷிணாமூர்த்தி, கன்னி மூலை கணபதி, சுப்ரமணிய சமேதரர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பலிபீடம், கொடிமரம், மற்றும் நந்திகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை “ஓம்” எனும் பிரணவ அட்சர வடிவமைப்பிற்குள் தனித்தனி சன்னதிகளில் பிரதிஷ்டை செய்தனர். திருக்கோயிலின் முதன்மைத் தெய்வமாக சிவபெருமானை குபேர லிங்கத் திருமேனியராக கருவறையுள் பிரதிஷ்டை செய்தனர்.
ஸ்ரீ சிதம்பரேஸ்வர ஸ்தோத்ரம் பாடலில் “தனஸ்ய மித்ரம்” மற்றும் “குபேர மித்ரம்” என்று சிவபெருமானுக்கும் குபேரனுக்கும் உள்ள நட்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடும் மக்களுக்கு கருணை கிட்ட வேண்டும் என மும்மூர்த்திகளிடம் குபேரன் கேட்டுக் கொண்டார். அதனால் இவ்விரண்டையும் இணைத்து மூலவருக்கு “ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர்” என திருப்பெயர் சூட்டியிருக்கலாம்.
சந்தையூர் ஜமீனால் விரிவாக்கம் :-
திருக்கோயிலுக்கு அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட நிலப்பரப்பை இறையிலி நிலமாக கொடுத்த பாண்டிய மன்னர் அப்பகுதிக்கு நாயக்கரின் பெயராலேயே “தொட்டையங்கோட்டை துவராபுரி” எனப் பெயரிட்டார். பாண்டிய மன்னர் மானியமாக கொடுத்த இறையிலி நிலத்தின் அளவு கருவறையின் விமான வெட்டு முகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கி.பி.13 ஆம் நூற்றாண்டின் இடையில் பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இறையிலி நிலத்தின் மானியங்கள் கிடைக்காததால் திருக்கோயில் பராமரிப்பின்றி இருந்தது.
அவ்வழியில் வியாபார நிமித்தமாக சென்றோர் சிவலிங்கத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டுச் சென்றார்கள். அவ்வாறு வழிபட்டுச் சென்றோரின் வியாபாரம் விருத்தியாகவும் லாபம் சீராகவும் இருந்ததால் மற்ற வியாபாரிகளும் வழிபடலாயினர். மேலும் அவர்களது வாழ்க்கையும் வளமுடன் வளர்ந்தது. இதனால் இத்தலம் வியாபார விருத்தி வழங்கும் ஸ்தலமாகவும் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்து வரமருளும் புண்ணிய ஸ்தலமாகவும் மக்களால் நம்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கி.பி.18 ஆம் நூற்றாண்டில் மக்கள் செல்வாக்கு காரணமாக சந்தையூர் பாளைய மன்னர் திருக்கோயிலைப் புனரமைக்க நிதியுதவி செய்ய முன்வந்தார். சந்தையூர் பாளைய அரசின் பங்களிப்புடன் கோயிலைப் புனரமைக்கும் வேலைகள் நடைபெற்றன. கருவறை விமானம், மகா மண்டபம், முன் மண்டபம், குலதெய்வ மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் ஆகிய சுண்ணாம்பு காரைப் பகுதிகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. கி.பி.1760 ஆம் ஆண்டு ஹைதர் அலி படையினரும் முகமது யூசுப்கான் படையினரும் வத்தலக்குண்டு பகுதியில் போரிட்டனர். அப்போரின் போது பல்வேறு பொதுச் சொத்துகளும் சேதமடைந்தன. அவற்றில் இத்திருக்கோயிலும் அடங்கும்.
அதற்கடுத்து ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரையிலும் திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்ற நாயக்க மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக இப்பகுதியில் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இத்திருக்கோயிலில் புனரமைப்பு வேலைகள் தொடரப்படாமலே விடுபட்டு விட்டது. பொதுச் சூழ்நிலைகளைப் பொறுத்து மாசிப் பச்சை திருவிழா மட்டும் அனுசரிக்கப்பட்டு குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்பட்டன.
முழுமையான புனரமைப்புடன் கும்பாபிஷேகம் :-
இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த பிறகு திரு. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தலைமை அர்ச்சகராக பொறுப்பு வகித்த காலத்தில் அவரது தலைமையில் புனரமைப்பு தேவைகளுக்காக பக்தர்களிடமிருந்தும் நிதி ஆதாரங்கள் பெறப்பட்டு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டனர். புனரமைப்பு வேலையின் பொழுது சில பாண்டியர் கலைப்பாணி கற்சிலைகள் தரைக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. கருவறை விமானம், பரிவார மற்றும் குலதெய்வ சன்னதிகள் போன்ற முக்கியப் பகுதிகள் புனரமைக்கப்பட்டு கருவறையில் புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதன்பின் அவ்வப்போது கிடைத்த நிதியாதாரங்களைக் கொண்டு மடப்பள்ளி, ஓய்வு மண்டபம், அன்னதான மண்டபம் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஆன்மீக அன்பர் ஒருவரின் பங்களிப்பால் கோயிலுக்கு வண்ண வேதிக்கலவை பூசப்பட்டு சுற்றுத்தடம் ஏற்படுத்தப்பட்டது.
கி.பி.2011 ஆம் ஆண்டு சிவகாமி அம்பாள், கால பைரவர், லிங்கோத்பவர், கருடாழ்வார், விஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வப் பிரதிஷ்டையோடு முழுமையாக புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஹோம குண்டத்தின் அக்னி வலம் சுழித்து எழுந்ததும் நன்னீராட்டின் பொழுது கருவறையின் மேலே கருடன் மூன்று முறை வலமிருந்து இடமாக வட்டமடித்ததும் இத்திருக்கோயிலின் புனிதத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
**C. விஸ்வநாதன்
குறிப்புச் சொற்கள்: ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர், குபேரன், அழகாபுரி, வஞ்சிஓடை, முப்பெருந் தெய்வங்கள், தொட்டையங்கோட்டை துவராபுரி, தொட்டையசாமி நாயக்கர், பாண்டிய அரசு, மிளகு மூட்டை, ஆமணக்கு முத்து, கலியுக சிதம்பரர், வத்தலக்குண்டு போர், சந்தையூர் பாளையம், புனரமைப்பு, சிதம்பரம் செட்டியார், குல தெய்வங்கள்.
ஆதார தளங்கள் :-
-
தினகரன் நாளிதழ் (மதுரை பதிப்பு), ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் கும்பாபிஷேக விளம்பர மலர் 2011.
-
சக்தி விகடன் (மார்ச் 18, 2014): http://www.vikatan.com/article.php?module=magazine&aid=92784
-
தினமணி நாளிதழ் (மதுரை பதிப்பு): http://www.dinamani.com/edition_madurai/article1181583.ece?service=print
-
திண்ணை – இணைய வாரப் பத்திரிகை: http://puthu.thinnai.com/?p=28594
-
நனவிலிச் செயல்கள், கட்டடக்கலை ஆய்வுகள், கலந்துரையாடல்கள், மற்றும் கள ஆய்வுகள்.